முஸ்லீம் வாக்குகளுக்கு குறி.. கமல், சீமானுடன் கை கோர்ப்பாரா ஓவைசி.. சிதறுமா வாக்கு வங்கி!
ஒவைசி தமிழக தேர்தலில் போட்டியிட முனைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: மிக முக்கியமான 2 கேள்விகள் தமிழக அரசியலில் பரபரத்து வட்டமடித்து வருகின்றன.. அவை இரண்டுமே அசாதுதீன் ஒவைசி சம்பந்தப்பட்டதுதான்.. தமிழக அரசியலுக்கும், ஒவைசிக்கும் என்ன சம்பந்தம்?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.. இதற்காக பல கட்சிகள் தங்கள் கூட்டணி விவகாரங்களை முடுக்கி விட்டுள்ளன.. மறைமுகமாக பேச்சுவார்த்தை, சீட் விவகாரங்கள், தொகுதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பலவும் பேசப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற சமயத்தில், அசாதுதீன் ஒவைசியின் பெயரும் அடிபட்டு வருகிறது.. பீகார் தேர்தல், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் ஒவைசி தவிர்க்க முடியாத நபராகியிருக்கிறார்.
போட்டி
கடந்த 2015-ல் பீகார் சட்டப்பேரவை தேர்தலில்தான் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியில் ஒவைசி முதன்முதலாக போட்டியிட்டார்..டெபாசிட் கூட கிடைக்கவில்லை.. அதனால் கடந்த ஆண்டு எம்பி தேர்தலில் மறுபடியும் போட்டியிட்டு, ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். இதற்கு பிறகு பீகார் தேர்தலில்தான் அதிகம் கவனம் பெற்றார்.
சாத்தியக்கூறுகள்
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இங்கும் ஒவைசி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இது உறுதிப்படுத்தப்படாத யூகத்தின் அடிப்படையிலான தகவல் என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் 2 உள்ளன.
திமுக
ஒன்று, வழக்கமாக முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே சாதகமாக விழும் நிலையில், ஒவைசி இங்கு நேரடியாக களம் கண்டால், அவருக்கு சாதகமாக இருக்கும் என்கிறார்கள்.. அதாவது திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்களை பிரிக்க ஒவைசி களம் இறக்கப்படலாம் அல்லது களம் இறங்கலாம் என்பதே அந்த முதல் கூற்று. அதேசமயம், அதிமுகவுக்கும் கூட கணிசமான முஸ்லீம்கள் வாக்கு அளித்து வருகின்றனர். எனவே அந்த ஓட்டிலும் தற்போது பெரும் சரிவு ஏற்படும், காரணம், அதிமுக பாஜகவுடன் கை கோர்த்திருப்பதால்.
கூட்டணியா?
அப்படி ஒருவேளை ஒவைசி தமிழக தேர்தலை எதிர்கொண்டால், அவர் தனியாக நிற்பாரா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுவாரா? என்பது மற்றொரு கேள்வி... பெரும்பாலும் தனித்து போட்டியிடவே வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. ஏதேனும் சூழலில் கூட்டணி வைத்து போட்டியிட்டால், அது நிச்சயம் கமல், சீமானுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
ஒவைசி
கமலும், சீமானும் ஒரே கூட்டணியில் சேரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக செய்திகள் வரும் சூழலில், இந்த கூட்டணியில் ஒவைசியும் இணைந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு பெரிய ஜர்க்-ஆக இருக்கும் என்பதே அரசியல் கணிப்பு. இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
பாஜக
ஆனால், ஒவைசி மீது பாஜகவின் பி டீம் என்றும், வாக்குகளை துண்டாடுபவர் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒவைசி மீது வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது.. அதாவது பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, ஆர்ஜேடி கூட்டணிக்கு அந்த வாக்குகள் சென்றுவிடாமல் தடுத்து, பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக ஒவைசி உதவியிருக்கிறார் என்பதே பிரதானமாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு.
நெத்தியடி பதில்
இப்படி ஒவைசி மீது சொல்லப்படும் அதே குற்றச்சாட்டு கமல் மீதும் இங்கு உள்ளது.. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜக-வின் B டீம் என்று சிலர் சொல்கிறார்கள்.. இருந்தாலும் இதை பற்றி கமலிடமே ஒருமுறை செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு கமல் பொறுமையாக சொன்ன நெத்தியடி பதில்,"நாங்கள் தமிழ்நாட்டின் "A டீம்" என்றார்.
கணிப்பு
அந்த வகையில், "B" டீம் என்று சொல்லப்பட்டவர்கள் இருவருமே இணைவார்களா என்பதுதான் பெருத்த எதிர்பார்ப்பு.. ஒருவேளை ஓவைசி தனியாக போட்டியிட்டாலும் சரி, அல்லது கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் சரி, இந்த முறை முஸ்லிம் வாக்குகள் அதிமுக, திமுகவுக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது.