எகிறும் டென்ஷன்.. என்னதான் நடக்கும்.. அதிமுக அணியிலேயே நீடிக்குமா இல்லை.. ஜகா வாங்குமா பாமக?
அதிமுக கூட்டணியுடன் பாமக நீடிக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக இணையுமா? அல்லது தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு தினம் தினம் எழுந்து வருகிறது.
அதிமுக கூட்டணியை உறுதி செய்ய, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் டாக்டர் ராமதாஸை ஏற்கனவே சந்தித்து பேசினர்.
அப்போது ஒருசில கோரிக்கைகளை ராமதாஸ் தரப்பு வைத்துள்ளது.. தங்களுக்கு துணை முதல்வர் பதவி, அதிக இடங்கள், அதிலும் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் செய்ய வேண்டும், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் சீட் விஷயத்தில், பாஜகவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு இப்போது வரை அதிமுக எந்த பதிலையும் சொல்லவில்லை..
இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வன்முறைகள் கொப்பளித்து, ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வரை பாமக நடந்து கொண்டுள்ளதால், எதற்காக அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? என்றும் ஒருசில அதிமுக நிர்வாகிகளே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம்.
மேலும், பாமகவை எதற்கு கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும்? டாக்டர் ராமதாஸின் பேர அரசியலுக்கு துணை போக வேண்டாம் என்று அதிமுகவினர், தங்கள் தலைமையை அறிவுறுத்தியும் வருவதாக தெரிகிறது. "அந்த கட்சிக்கு தரும் சீட்டுக்களில் பாதியை தேமுதிகவுக்கு தந்தால்கூட போதும், விழுந்து விழுந்து வேலை பார்ப்பார்கள்.. நமக்கு விசுவாசமாக இருப்பார்கள்" என்று மூத்த நிர்வாகிகள் அதிமுக தலைமையிடம் சொல்லி வருகிறார்களாம்.
அதேபோல, பாமகவுக்கு ஒதுக்கும் தொகுதியைவிட கூடுதலாகவே பாஜகவுக்கே தரலாம் என்றும் இன்னொரு தரப்பு சொல்கிறார்களாம்.. துணை முதல்வருக்கே இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.. அதனால் சீட் விஷயத்தில் பாமகவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பில்லை போல தெரிகிறது.
அதேபோல, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில், பாமக கோரிக்கையை நிறைவேற்றினால், இதர சமுதாயங்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்றும் அதிமுக மேலிடம் கருதுகிறது... அதனால் ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, அனைத்து ஜாதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என்று அதிமுக தலைமை நினைக்கிறதாம்.
மேலும், துணை முதல்வர் பதவியை மற்ற கட்சிக்கு இதுவரை அதிமுக தந்ததில்லை.. இனியும் அதை விட்டுக்கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.. ஆக, பாமக இனி என்ன செய்ய போகிறது? அதிமுக தரும் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமா? அல்லது தனித்து போட்டியா? என்பதெல்லாம் வரும் 31-ம்தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவாகும் என்கிறார்கள்.