ஓபிஎஸ்-ஸோடு கைகோர்க்கும் சசிகலா.. கவனிச்சீங்களா? ‘மியூச்சுவல்’ மெகா பிளான்.. சிக்கலில் எடப்பாடி!
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ஒரு திட்டத்தோடு களத்தில் இறங்கியுள்ளார் சசிகலா. விரைவில் சசிகலா - ஓபிஎஸ் கூட்டணி வெளிப்படையாக உருவாகும் எனப் பேச்சு கிளம்பியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது தரப்பை வலுப்படுத்துவதற்காக சசிகலாவின் ஆதரவைப் பெறுவார் எனக் கூறப்பட்ட நிலையில், சசிகலா தரப்பில் இருந்து வெளிப்படையாக சில நகர்வுகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் சசிகலா. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் சசிகலாவின் இந்த முன்னெடுப்பு ஓபிஎஸ் அணிக்கு பலம் கொடுத்துள்ளது.

எடப்பாடிக்கு சிக்கல்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை மொத்தமாக கட்சியை விட்டே தூக்கியிருக்கும் நிலையில், ஈபிஎஸ் தரப்புக்கு தலைவலி கொடுக்கும் விதமாக சீனில் வந்துள்ளா சசிகலா. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் சசிகலா. இப்போது நிலவும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் சசிகலா.

கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுக பொதுச் செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா சென்னை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேல்முறையீடு
அதனை ஏற்றுக்கொண்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சசிகலாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்துத்தான் தற்போது சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவரது மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களை கேட்காமலும் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு ஆகஸ்ட் 2வது வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு செக்
சசிகலா முன்னர் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து தாக்கல் செய்த மனுவால் தான் சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இன்று இருவரும் பிரிந்துள்ளதால், மேல்முறையீட்டுக்கு வரும்போது ஓபிஎஸ் தரப்பும் தனியாக வாதம் வைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கக்கூடும். அதன் காரணமாகவே சசிகலா தற்போது இந்த வழக்கை கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

ஓபிஸ்ஸின் ஆதரவு நிலைப்பாடு
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்த கேள்வி எழும்போதெல்லாம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசி எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன் என்று தான் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். எடப்பாடி தரப்பினரைப் போல, சசிகலாவை கடுமையாக விமர்சித்துப் பேசாமலேயே இருந்து வருகிறார் ஓபிஎஸ். சமீபத்தில் கூட, ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை, அவர் அதிமுகவில் தான் இருக்கிறார் எனத் தெரிவித்திருந்தார்.

சசிகலாவும் ஆதரவு
ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் சசிகலா எடப்பாடி பழனிசாமியையே கடுமையாக தாக்கி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை தீவிரமாக விமர்சிப்பதில்லை. அதிமுக எம்.பி ஓபி.ரவீந்திரநாத்தை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கியதற்கும் கண்டனம் தெரிவித்தார் சசிகலா. இதன் மூலம் அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்கும் முடிவுடனே இருப்பது தெரிகிறது. இதனால் மியூச்சுவலாக, இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவாக நிற்கக்கூடும்.

ஒன்றிணையும் சூழல்
'எதிரிக்கு எதிரி' நண்பன் என்ற முறையில் சசிகலாவும் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்காக ஓபிஎஸ்ஸூக்கு கை கொடுக்கத் தயாராகி வருகிறார். இதன் மூலம் சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஓரணியில் திரளும் சூழலும் உருவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான சிக்கல் ஏற்படும் என்று கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications