"வேட்பாளர் ஒப்புதல் படிவம்" ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் அனுப்பப்படும்.. தமிழ்மகன் உசேன் முக்கிய தகவல்!
ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்ப உள்ளதாக தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பப்படும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல் இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.

வேட்பாளர் ஒப்புதல் படிவம்
இந்த நிலையில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அதிமுக தலைமை அலுவலகம் மூலம் வேட்பாளர் ஒப்புதல் படிவம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு, திங்கட்கிழமைக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகம்
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் குறித்து கருத்து கேட்கும் படிவம் அனுப்பி வைக்கப்படுமா என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனிடையே இன்று காலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆகியோர் வந்தனர்.

ஓபிஎஸ்-க்கு ஒப்புதல் படிவம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வேட்பாளர் ஒப்புதல் படிவம் சற்று நேரத்தில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு?
அதேபோல் அதிமுகவின் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தரப்பின் கேஎஸ் தென்னரசு தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் சூழலில், வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் பெரும்பான்மை ஆதரவு தென்னரசுக்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஓபிஎஸ் யாருக்கு ஆதரவு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications