பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? தமிழக அரசின் முடிவு என்ன? அன்பில் மகேஷ் பேட்டி
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்படும் என்றும், அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று பரவல் குறையாததால், பள்ளிகள் சரியாக செயல்படவில்லை. இப்போதும் தொற்று தீவிரமாக உள்ளது. இதையடுத்து சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். மதிப்பெண் வழங்குவதற்கு முறையாக வழிமுறைகள் பின்பற்றப்படும் என்று கூறியிருந்தார்.
மாநிலங்களை பொறுத்த வரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மாநிலங்களுமே தேர்வை நடத்துவதா வேண்டமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. குஜராத் உள்பட பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசை பின்பற்றி 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து வருகின்றன.
தமிழக அரசு முடிவு
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க, தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
தேர்வு நடத்த ஆதரவு
அதன்படி, அண்மையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்புகள் துவங்கின. சுமார் 60 சதவீதம் அளவிற்கு பெற்றோர்கள் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல் உண்மையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அரசுக்கு அனுப்பி வைப்பு
தற்போதைய நிலையில் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள் போன்றோர், மாவட்ட ரீதியாக தங்கள் கருத்துக்களை, பள்ளி கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கருத்துக்கள் அரசுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்
மற்ற மாநிலங்கள் எப்படி
இந்நிலையில் இன்று மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் , பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. இது தொடர்பாக மற்ற மாநிலங்கள் எடுத்துள்ள முடிவையும் கவனித்து வருகிறோம்.
எம்எல்ஏக்கள் ஆலோசனை
12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்படும். பின்னர் மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் முதல்வர் முக ஸ்டாலின் முடிவை அறிவிப்பார்" இவ்வாறு கூறினார்.