சான்ஸே இல்ல.. ‘எண்ட் கார்டு’ போடுமா இடைத்தேர்தல்? தினகரன் ‘டார்கெட்’.. எடப்பாடி கணக்கு நொறுங்குதே!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவும் அதிமுக விவகாரத்தில் தீர்வைக் கொண்டு வராது என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.
சென்னை : ஓபிஎஸ்ஸை விட எடப்பாடி அதிக வாக்குகளை வாங்கினால் கூட பிரச்சனைக்கு முடிவு வராது. 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். அதிமுகவே அவர் கைக்குப் போகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் இணைந்து நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்தி, தினகரனை தனிக்கட்சி தொடங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, இந்த இடைத்தேர்தல் முடிவும் அதிமுக விவகாரத்தில் ஒரு தீர்வைக் கொண்டு வராது என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் முதல் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் வெடித்து, கடுமையாக நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் தனது வலிமையை நிலைநாட்ட முயன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடிக்கு எதிராக அதிமுகவுக்கு உரிமை கோரும் தனது முயற்சியை ஓபிஎஸ் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும், இந்த இடைத்தேர்தலில் கட்சிகள் போடும் அரசியல் கணக்குகள் என்ன என்பது பற்றி நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார் பத்திரிகையாளர் ப்ரியன்.
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
இரட்டை இலை கிடைக்குமா?
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை என்ன நடக்கும்? ஏற்கனவே 2 முறை முடக்கப்பட்ட இரட்டை இலை மீண்டும் முடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில் : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன. எடப்பாடி களத்தில் இருக்கும் வரை ஓபிஎஸ் களத்தில் இருப்பார். எந்த இடத்திலாவது அவர் விலகிவிட்டால் அதிமுகவுக்கு அவர் உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பு பறிபோய்விடும். அதை விட்டுக்கொடுத்துவிட்டு அவர் ஆட்டத்தை தொடர முடியாது. தனது ‘க்ளெய்மை' தொடர வேண்டும் என்றால், ஈபிஎஸ் என்னென்ன மூவ்களை செய்கிறாரோ அதற்கு எதிரான மூவ்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இரட்டை இலையை இருவருமே கோரி தேர்தல் ஆணையத்தில் மூவ் செய்தாக வேண்டும். ஒருவேளை எடப்பாடிக்கு இரட்டை இலை கிடைத்தாலும், சுயேட்சை சின்னத்திலாவது ஓபிஎஸ் போட்டியிட்டே ஆகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஓபிஎஸ் டார்கெட்
அந்த இடத்தை நோக்கி ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். அப்படியான சூழல் வரும்போது டிடிவி தினகரன் போன்றவர்கள், தாங்கள் விலகி நின்று ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பது போன்ற பல்டியையும் அடிக்கலாம். எந்த நிமிடத்திலும் என்ன வேண்டுமானால் நடக்கலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பு வாங்கும் வாக்குகளை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேறு ஏதேனும் முடிவுகளையும் எடுக்கலாம். எடப்பாடி தலைமையில் தொடர்ந்து தோல்வி தான், பலவீனம் தான் என அதிமுக தொண்டர்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் எடப்பாடியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்ஸின் டார்கெட். அதனால், எந்த கட்டத்திலும், ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க மாட்டார். பாஜகவின் முடிவும் முக்கியமானதாக இருக்கும். 2017 முதல் உறுதுணையாக இருந்து வரும் ஓபிஎஸ்ஸை நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டாம், ஈபிஎஸ் மட்டும் நிற்கட்டும் என பாஜக சொல்லுமா என்பதும் பெரிய சந்தேகம் தான்.
பாஜக ஒருவருக்கு ஆதரவு கொடுக்காது
வேண்டுமானால், நீங்கள் இருவரும் போட்டியிடுங்கள், நாங்கள் யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை, விலகி நின்று வேடிக்கை பார்க்கிறோம் எனச் சொல்லலாமே தவிர, அல்லது நாங்களும் போட்டியிடுகிறோம் என்ற முடிவை எடுக்கலாமே தவிர, ஒருவரை மட்டும் ஒதுங்கி நிற்கச் சொல்வார்களா என்பது கேள்விக்குறி தான். ஏற்கனவே 2 முறை முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மூன்றாவது முறையும் முடங்குவது பெரிய விஷயம் கிடையாது. அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்கான தலைமையைத் தேடிக் கொண்டிருக்கிறது. அக்கட்சிக்கு வலுவான ஒற்றைத் தலைமை தான் தேவை. ஆனால், எடப்பாடி இப்போது இருப்பது போலான ஒற்றைத் தலைமை இல்லை. எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டும். இன்றோ, நாளையோ, 2024லோ, 2026லோ அதிமுக ஒற்றைத் தலைமையைக் கண்டடையும். அதற்கிடையே இதுபோன்ற முட்டல் மோதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
ஓபிஎஸ் அணிக்கு சின்னம்?
கேள்வி : தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இன்று வரை அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளரே இருக்கிறார். ஈபிஎஸ் தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். நாங்கள் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறோம். ஓபிஎஸ் - வைத்திலிங்கம் கையெழுத்துப் போட்டால் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என்ற வாதத்தை ஓபிஎஸ் அணி வைக்கிறதே.. இதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா என்ற பிரச்சனைக்கு ஐகோர்ட் சிவில் டிஸ்பியூட் எந்த தீர்வும் அளிக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டுக்கே மீண்டும் திருப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. 2021ல் நடந்த உட்கட்சி தேர்தல் விஷயத்தை டிவிஷன் பெஞ்ச் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை, பொதுக்குழு கூட்டப்பட்ட விவகாரத்தை மட்டும்தான் கையாண்டது. அதனால், உச்ச நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான அடிப்படை சிக்கலுக்கு தீர்வு கண்டால், மற்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை கிடைத்துவிடும். சிவில் கோர்ட்டில் முடிவு செய்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் சொல்லலாம்.
சஸ்பென்ஸ்
அப்படி நடந்தால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புக்கும் பின்னடைவாக அமையும். இருவரும் இரட்டை இலை சின்னம் இன்றி சுயேட்சை சின்னத்தில் தான் நிற்கும் சூழல் ஏற்படும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதையும் யூகிக்க முடியாத நிலையே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் என்ன மாதிரியான முடிவுகள் வரும், அதில் பாஜக எந்த மாதிரி ரோலை எடுக்கும் என்பதும் ஊகிக்க முடியாததாகவே இருக்கிறது. எனவே, இந்த இடைத்தேர்தல் பிளவுபட்ட அதிமுக மீண்டும் ஒருங்கிணையுமா, அதிமுகவின் எதிர்காலம், பாஜகவின் செயல்பாடுகள், 2024 எம்.பி தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் போன்ற விஷயங்கள் என எல்லாவற்றிலும் ஒரு தீர்வை ஏற்படுத்தக்கூடும். அதுவரை இந்த சஸ்பென்ஸ் தொடர்கிறது. இரு தரப்பும் நூற்றுக்கணக்கானோர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எல்லாம் அமைத்து களமிறங்குவது தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளத்தான்.
களத்தில் தினகரன் - 3 பேரின் டார்கெட்
டிடிவி தினகரன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்கு ஒரு அட்வாண்டேஜும் கிடையாது. ஆனாலும் ஏன் களத்தில் நிற்கிறார்? எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கும் வாக்குகளை குறைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கிறார். ஓபிஎஸ் ஏன் நிற்கிறார் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது க்ளெய்மை கைவிட முடியாது என்பதால் களத்தில் இருக்கிறார். ஓபிஎஸ்ஸை விட அதிகமான வாக்குகளை வாங்கி பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி களத்தில் குதித்துள்ளார். இப்படி, எல்லோருக்குமே வெற்றி பெறுவதை விட அவரவருக்கு தேவையான சில விஷயங்களைப் பெற இந்த இடைத்தேர்தலைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். பாஜகவின் மூவ், பல விஷயங்களுக்கு முடிவுகட்டும்.
முடிவுக்கு வருமா? ம்ம்ஹூம்!
கேள்வி : உச்ச நீதிமன்றம் பல விஷயங்களை இந்த விசாரணையின்போது குறிப்பிட்டது. அதிமுக கட்சி விதிகளே எங்களுக்குப் புரியவில்லை என்றனர். எவ்வளவு நாளைக்கு கோர்ட்டிலேயே வழக்கை நடத்திக் கொண்டிருப்பீர்கள் என்று கேட்டனர். இந்த பிரச்சனை கோர்ட்டில் முடியாதா? இந்த சண்டை எப்போதுதான் முடிவுக்கு வரும்?
பதில் : எடப்பாடி பழனிசாமி, இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, தனக்கு நிர்வாகிகள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது என நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஓபிஎஸ்ஸை விட எடப்பாடி அதிக வாக்குகளை வாங்கினால் கூட அதுவும் ஒரு முடிவை கொண்டு வராது. 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். அதிமுகவே அவர் கைக்குப் போகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் இணைந்து நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்தி, தினகரனை தனிக்கட்சி தொடங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, இந்த இடைத்தேர்தல் முடிவும் அதிமுக விவகாரத்தில் ஒரு தீர்வைக் கொண்டு வரும் என்று சொல்ல முடியாது.