"யோக்கிய சிகாமணிகளே".. ஆ. ராசா ஆதாரத்தோடு சொன்னாரே, ஏன் கப்சிப்? பாஜக மீது பாய்ந்த எதிர்க்கட்சிகள்
பாஜகவின் 5ஜி ஊழல் குறித்து விசிக வன்னியரசு கேள்வி எழுப்பி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வெடித்து கிளம்பி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாஜகவுக்கு தலைவலி கூடியுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம் ஒருவாரம் நடந்து முடிந்த நிலையில், மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இதை பற்றி ஒரு பேட்டி தந்திருந்தார்.
அப்போது, "2ஜி, 3ஜி, 4ஜி ஏலத்தோடு ஒப்பிடும்போது, 5ஜி ஏலம் ரூ.5 லட்சம் கோடிக்கு விற்பனையாகும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.. அதனால் எப்படியும் ஏலத்தில் 4.30 லட்சம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், ரூ.4.30 லட்சம் கோடிக்கு 72 ஜிகாஹெட்ஸ் அலைவரிசை ஏலம் விடப்பட்டதில், வெறும் ரூ.1.50 லட்சம் கோடிதான் கிடைத்ததாக தகவல் வெளியானது.
ஆ. ராசா போட்ட 5ஜி குண்டு.. டென்ஷனில் பாஜக..
ஆ. ராசா
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக எம்பியும், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரான ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இதில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2ஜி அலைக்கற்றையோடு ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை 10 முதல் 20 மடங்கு மதிப்பில் உயர்ந்தது, திறன்பெற்றது... அதை எப்படி குறைந்த தொகைக்கு ஏலம் கொடுக்க முடியும்? மீதி பணம் எங்கே போனது? இந்த ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்... இந்த ஏலத்தில் எவ்வளவு மோசடிகள் நடந்துள்ளது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வானதி சீனிவாசன்
இதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பதிலளித்திருந்தார்.. "இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை நாட்டிற்கு தந்திருக்கிறது 5ஜி அலைக்கற்றை. இது பற்றி குறை சொல்லும் ஆ.ராசாவுக்கு தான் இதில் எப்படி ஊழல் செய்யலாம் என்பது தெரியும்... ஆனால், பாஜகவுக்கு தெரியாது. இந்த அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட இல்லாமல் 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது. இலக்கை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம் . ஆனால் வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடந்திருக்கிறது... தேவையில்லாமல் மத்திய அரசை குறை சொல்லக்கூடாது" என்று ராசாவுக்கு பதிலடி தந்திருந்தார்.
யோக்கிய சிகாமணிகளே
இதனிடையே திமுகவின் ஐடி விங் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டது.. "2022ல் பாஜக ஆட்சியில் 5ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பானி, அதானி, மிட்டல் கூட்டாளிகள் எடுத்த ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. அப்படியென்றால் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? அப்போது திமுக மீது பொய்ப்பழிப் போட்ட பாஜக யோக்கியசிகாமணிகளே இப்போது பதில் சொல்லுங்க" என்று கேள்வி எழுப்பியிருந்தது.
வினோத் ராய்
அதேபோல, தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. "18 வருடங்களுக்கு முன்பு, தொழில் நுட்பத்தில் மிகவும் குறைந்த 2ஜி அலைக்கற்றை விற்பனையால் ரூ 1,73,000 கோடி அரசுக்கு இழப்பு என்றார் வினோத் ராய்... காங்கிரஸ் - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோற்றது. ஆ.ராசா, கனிமொழி சிறை சென்றனர்... மேம்பட்ட 5ஜிதொழில்நுட்பம் ரு 1,50,000 கோடிக்கு மேல் பெற முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
வன்னியரசு
எனினும், விசிக இந்த ஊழல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "ஊழலை பற்றி வாய்கிழிய பேசியவர்கள் எங்கே? திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா அவர்கள் ஆதாரத்தோடு முன் வைத்த 5ஜி ஊழல் குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? இந்திய பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் தேசவிரோத பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
ராஜினாமா?
ஆக, 5ஜி ஊழல் விவகாரத்தை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, விமர்சிக்க தொடங்கி உள்ளன.. 2ஜி புகார் வந்தபோது அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஊழல் புகாரை நீதிமன்றத்திற்கு சென்று வாதம் செய்து, ஆதாரங்களை அடுக்கி, வழக்கிலிருந்து வெளியே வந்தார். அதுபோலவே, இப்போதைய மத்திய அமைச்சர் பதவி விலகுவாரா? என்று சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழுந்து வருகின்றன..
நீதிவான்கள்
மேலும் சிலர், "2ஜிக்கு உயிர் போன மாதிரி குதித்தவர்கள் எங்கே?? உயி௫டன் தான் இருக்கிறார்களா??? அய்யா காந்தியவாதி லோக்பால் கேட்டவர் எங்கே? அதை பயன்படுத்தி முதலமைச்சர் ஆன கெஜிரிவால் எங்கே??? அந்த குழுவில் இருந்து புதுச்சேரி ஆளுநர் ஆன அந்த அம்மா கிரண்பேடி எங்கே???? நீதிவான்கள் மீடியாக்கள் எங்கே ? என்றும் கேள்விகள் வெடித்து வருகின்றன.
Recommended Video
டோட்டல் வித்தியாசம்
மற்றொருபுறம், பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களும் சொல்லப்பட்டு வருகின்றன.. 5ஜியில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லும் ஆ.ராசா, தன்னிடம் இருந்தால், நேராக கோர்ட்டுக்கு போக வேண்டியதுதானே? சட்டப்படி இந்த வழக்கை சந்திக்க வேண்டியதுதானே? என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 2ஜிக்கும், 5ஜிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.. மோடி பிரதமரான பிறகு, நடைபெற்ற அனைத்து ஏலங்களும் ஊழலற்ற முறையில் நடந்தது.. அதனால்தான், 3ஜி, 4ஜி போன்றவை, 2ஜி யை விட அதிகமாக ஏலம் போனது.. இப்போதும் 5 ஜி ஏலம் மிகவும் வெளிப்படைதன்மையுடன் நடைபெற்றுள்ளது.. இழப்பும் இல்லை, ஊழலும் இல்லை.. திமுக தேவையில்லாமல் அவதூறு பரப்புகிறது" என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.