இதயமே இதயமே... உலக இதய நாளில் இதயத்தைக் காக்க இதமான யோசனைகள்
லப் டப் சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பதால்தான் நாம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக இதய தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் இதயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
சென்னை: மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. லப் டப் என்று ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான வார்த்தைகளை மனிதர்களுக்கு உணர்த்திக்கொண்டுதான் உள்ளது. ஆயுள் முடியும் தருணத்தில்தான் இதயம் துடிப்பது நிற்கும். உலக இதய தினம் கடைபிடிக்கப்படும் இந்த நாளில் இதயத்தை பாதுகாக்கவும், இதயத்தைப் பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
Recommended Video
ஆண்டு தோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சராசரியாக நம் இதயத்தின் எடை 300 கிராம். சாதாரணமாக, இதயமானது ஒவ்வோர் இதயத் துடிப்பின்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை உடலுக்குள் அனுப்புகிறது. இதை நிமிடத்துக்குச் சொன்னால் 5 லிட்டர். கடுமையான உடற்பயிற்சியின்போது நிமிடத்துக்கு 20 லிட்டர் வரையிலும், ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது 30 லிட்டர் வரையிலும் இது அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதயம் துடித்தால் மட்டுமே நாம் உயிர்வாழ முடியும் இதயத்துக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாக இருக்கும். அதை நுரையீரல்களுக்கு அனுப்பி, கார்பன்டை ஆக்ஸைடை அதற்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆக்ஸிஜனைப் பெற்று சுத்த ரத்தமாக மாற்றி மீண்டும் இதயத்துக்குக் கொண்டு வந்து உடலுக்குத் தருகிறது. அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல், உணவுச் சத்துகளும் உள்ளன. இதனால்தான் உடல் இயங்குகிறது. இதயம் செய்யும் இந்தப் பணியால்தான் நாம் உயிரோடு உலாவிக்கொண்டிருக்கிறோம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு பலரது இதயத்தை முடக்கியுள்ளது. முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்களையும் கொரோனாவுடன் சேர்ந்து திடீர் மாரடைப்பும் தாக்கி உயிரை பறித்துள்ளது. இதய சிகிச்சை வல்லுநர்கள், கார்டியாலஜிஸ்ட் மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதய பாதிப்பு உண்டாவதாகக் கூறிவருகின்றனர். அதேபோல் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கொரோனா எளிதில் தாக்குவதாகவும் கூறியுள்ளனர்.
கோவிட் -19 இலிருந்து மீட்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் இதய பிரச்சினைகளை சந்தித்துள்ளனர் மற்றும் ஏற்கனவே இதய பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் கூட அதன் விளைவுகளை சந்திந்து மறுபிறவி எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இந்த வைரஸ் இதய பலவீனம், இதய செயலிழப்பு, பக்கவாதம் என எதையும் உண்டாக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இதய பாதிப்பு உள்ளவர்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
இதயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் தங்களுடைய இதயத்தை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இன்றைய கால கட்டத்தில் யாருக்கு எந்த நேரத்தில் இதய நோய் வருகிறது என்று கணிக்க முடியவில்லை. 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் உண்டாகிறது. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.
புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 ஆண்டுகள் கழித்துக் கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவிகிதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம். ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது. எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடக்கூடாது.
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். கோபம் டென்சனை குறைப்பது நலம். நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இதயத்தில் அழுத்தமோ, டென்சனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். இதயத்தை காக்க மற்ற உணவுவகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம்.
ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்
வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் இதயபாதிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
இதயம் நிறைய அன்பும் நேசமும் இருந்தால் அதில் நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதோடு நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். காலையும் மாலையும் சில நிமிடம் காலார நடங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் அனைவரிமும் நட்போடும், நேசத்தோடும் பேசுங்கள். இதயம் இதமாக இயங்கும். நாம் தினமும் நிம்மதியாக உறங்கி விழிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications