அயலக தமிழர் திருநாள்: எல்லைகள் பிரித்தாலும் மொழியால் இணைந்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழால் இணைவோம் என்பதன் அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை உள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தமிழால் இணைவோம் என்பதன் அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை உள்ளது. சாதி மதங்களைக் கடந்து அனைவரையும் இணைக்கும் வல்லமை மொழிக்கு உள்ளது என்று அயலக தமிழர் திருநாள் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும், தமிழ்நாடுதான் தாய் வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமை. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்" அமைக்கப்படும். 5 கோடி, புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தை கொண்டு உருவாக்கப்படும் என கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.

மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடி மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கு ஆண்டுதோறும் 3 கோடி ஒதுக்கப்படும் என்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், ஜனவரி 12ஆம் நாள் புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாள் ஆக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
சட்டசபையில் கடந்த வாரம் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தமிழர் நல சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அயலகத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கு உதவ 'தாய் மண் திட்டம்' வழிவகை செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் அயலக தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
உலக மெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகள் அனைவரும் தமிழ் வணக்கம். தமிழால் இணைவோம் என்பதன் அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை உள்ளது. சாதி மதங்களைக் கடந்து அனைவரையும் இணைக்கும் வல்லமை மொழிக்கு உள்ளது என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
நாட்டு எல்லைகள் நம்மை பிரித்தாலும் தமிழ் மொழியால் இணைந்துள்ளோம் என்று குறிப்பிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்று காலமாக இல்லாதிருந்தால் இந்த விழாவை மிகப்பெரும் விழாவாக முன்னெடுத்திருப்போம் என்று கூறிய ஸ்டாலின், பரந்த உள்ளம் கொண்ட நாம் காணொலியில் அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications