"பெரிய பிரச்சனை.." மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தை தடை செய்யுங்க! சுப்ரீம் கோர்டில் வழக்கு
சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தல் திமுக சார்பில் பல வாக்குறுதிகளை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்வைத்தது.

இதற்கு அப்போதே மிகப் பெரியளவில் வரவேற்பு இருந்தது. தேர்தல் களத்திலும் கூட இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். எனவே திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் குறித்து பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
உரிமை தொகை: அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் தான் இந்தாண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப். மாதம் முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்று பெயரிடப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
மேலும், தகுதி வாய்ந்த பெண்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்களில் மொத்தம் 13 கேள்விகளும் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும், இந்த உரிமை தொகை திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது ஆண்டு வருமானத்தில் கட்டுப்பாடு, சொந்த பயன்பாட்டிற்கு கார் வைத்திருக்கக் கூடாது, வேறு உதவித் தொகை திட்டங்களைப் பெறக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விண்ணப்பம்: அத்திட்டத்திற்காக மொத்தம் 1.57 கோடி பேர் விண்ணப்பித்தனர். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி அதில் இருந்து தகுதி வாய்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மொத்தம் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மாதாமாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்குப் பெண்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இருப்பினும் சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதில் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரும் கூட தாங்கள் தகுதியுள்ளவர்கள் எனக் கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தின் நிலை குறித்துக் கண்டறியத் தனி இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில், இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
சுப்ரீம் கோர்டில் வழக்கு: நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18 வரை மேல்முறையீடு செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள இந்தத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் இருக்கும் சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications