செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து வரும் சர்வதேச டென்னிஸ்.. பரிசுத்தொகை அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தொடர் தொடங்க உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த பின்னர், விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கான அரசு பணி, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இவையெல்லாவற்றை விடவும், சென்னையில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
சர்வதேச செஸ் வீரர்கள் சென்னையில் வந்தது உலகின் பார்வை தமிழ்நாடு மீது விழுந்தது. அதேபோல் தமிழக அரசுக்கு தேசிய அளவிலும் உலகளவிலும் பெயர் கிடைத்தது. தற்போது விளையாட்டுத்துறையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சென்னையில் சர்வதேச டென்னிஸ் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது.

சென்னை ஓபன்
சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வரும் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள்
இந்தத் தொடரில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனையான ரெபேக்கா பீட்டர்சன், பெல்ஜிய வீராங்கனை எலிஸ் மெர்டென்ஸ், பிரெஞ்சு வீராங்கனை கரோலின் கார்சியா மற்றும் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மகளிர் டென்னிஸ் தொடருக்காக ஸ்சான்சர்கள் குவிந்துள்ளனர்.

ஸ்பான்சர்கள் அதிகரிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்பான்சர் செய்துள்ளனர். இது தமிழக விளையாட்டு வீரர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தகுதி சுற்று போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது.

தகுதிச்சுற்றுகள்
ஒற்றையர் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் சாய் சமர்தி, சவ்ஜன்யா பவிசெட்டி, ரியா பாட்டியா, லட்சுமி பிரபா, ருதுஜா போசாலி உள்பட 24 பேர் பங்கேற்கிறார்கள். 2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இரு நாட்களும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

பரிசுத்தொகை
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க 7 நாட்களுக்குரிய சீசன் டிக்கெட் ரூ.850, ரூ.1,700, ரூ.2,550 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் chennaiopenwta.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். 2017ம் ஆண்டுக்கு பின் சென்னையில் டென்னிஸ் தொடர் நடப்பது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. மேலும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றிபெறும் வீராங்கனைக்கு பரிசுத்தொகையாக ரூ.2 கோடியே 38 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications