கண்முன் வரும் "வலிமை” பட காட்சி.. கலங்கிய பெற்றோர்கள்! ”பைக்கர்ஸ்” கேங் போல் மாணவர்கள் செய்த குற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்களிடையே பரவும் கஞ்சா பழக்கத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் மற்றும் காரைக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களாகவும், அதற்காக குற்றங்களில் ஈடுபடுபவர்களாகவும் மாணவர்கள், இளைஞர்கள் காட்டப்படுவார்கள். ஒரு கட்டத்தில் அவர்களை காவல்துறை கைது செய்தபோது பெற்றோர் கலங்கும் வீடியோ பார்வையாளர்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தும்.
சினிமாவில் வரும் இந்த காட்சிகள் தற்போது நிஜத்திலும் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. வேலையின்மை காரணமாகவும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும், போதைப் பொருட்களுக்கு அடிமையானதாலும் பல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் விற்பனையில் இறங்குகின்றனர்.

காஞ்சிபுரம்
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக 9 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவி, புருஷோத்தமன், அருண்குமார் , நந்தகுமார், சூரிய பிரதாப், கணேஷ், லோகேஷ், விஜய், ஐயப்பன் ஆகியோரிடம் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி மாணவர்கள்
இதேபோல் காரைக்குடி முத்துராமலிங்கம் நகரில் கஞ்சா விற்றதாக காரைக்குடியில் உள்ள கல்லூரியில் தமிழ் இலக்கியம் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் மாயராஜ் (வயது 20) என்பவரையும் மதுரையில் பாலிடெக்னிக் படித்து வந்த கலைவாணன் (வயது 21 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சாவில் அதிக லாபம்
இதில் கைது செய்யப்பட்ட மாணவர் கலைவாணன், கஞ்சா விற்பனையில் நல்ல லாபம் கிடைத்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. காரைக்குடியில் கல்லூரி மாணவர்களிடையே அதிவேகமாக பரவி வரும் கஞ்சா பழக்கத்தை ஒழிக்க கல்வி நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் போலீசார் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் வேதனை
மாணவர்களிடையே அதிவேகமாக பரவி வரும் கஞ்சா பழக்க காரணமாக மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் காரைக்குடியில் கஞ்சா விற்றதாகவும் புகைத்ததாகவும் 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 22 வயதிக்குட்பட்டவர்கள் என்பதும் இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விநியோகம் செய்யும் மொத்த விற்பனையர்களை முற்றிலும் ஒழிக்க போலீசார் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பலர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications