காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தாலும்.. சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க விடமாட்டார் அசோக் கெலாட்?
கொச்சி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுவது குறித்து சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு தலைமை இல்லாததால், வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது.
தற்போது 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
நாங்க சொல்றபடி கேளுங்க! அரசு ஹாஸ்டலுக்குள் அத்துமீறிய 5 பேர்! கொட்டித் தீர்த்த மாணவிகள்! பரபர பழனி!
காங்கிரஸ் தேர்தல்
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி மறுத்து வருகிறார். இதனால் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
தீர்மானம் நிறைவேற்றம்
இருந்தும் தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிகார், புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகள் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் யார் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதேபோல் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அசோக் கெலாட் போட்டி
இதனிடையே காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு மூத்தத் தலைவர்களான சசி தரூர், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சோனியா காந்தியும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் வரும் வாரத்தில் சசி தரூர் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை பதவி
அதேபோல் அண்மையில் ராஜஸ்தான் எம்எல்ஏ-க்களை சந்தித்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தான் எங்கேயும் செல்லவில்லை. ராஜஸ்தான் மக்களுக்கான தனது பணி தொடரும் என்றும் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் தலைவராக வெற்றிபெற்றாலும், முதல்வர் பதவியில் தொடரவே அசோக் கெலாட் விரும்புவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில், ஒரே சமயத்தில், இரண்டு பதவிகளை ஒருவர் வகிக்க முடியாது.
சச்சின் பைலட் கருத்து
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சச்சின் பைலட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின் பைலட், இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சித் தேர்தல் செயல்முறை நடந்து வருகிறது. யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராஜஸ்தானில் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் வெற்றிபெற வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். முக்கிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் பெறும் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு முறை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இம்முறை சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளோம். அடுத்த ஒரு ஆண்டில் கடுமையாக உழைத்தால், நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்தார்.