ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டிக்கு புது வீடு..ஆனந்த் மகேந்திரா அசத்தல் பரிசு!
கோவை: கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் சார்பில் சொந்த வீடு கட்டி தருவதற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது தள்ளுவண்டி கடைகளில் கூட ஒரு இட்லி குறைந்தது 5 ரூபாய் முதல் 7 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதுவே ஸ்டார் ஓட்டல்களில் 50 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது..
ஆனால் யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார் கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி.

தனி ஆளாக வியாபாரம்
85 வயதாகும் கமலாத்தாள் பாட்டி, ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.

மிக்சியும் கிடையாது
சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது.. மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது.. சட்னி அரைக்க மிக்சி கிடையாது.. எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான்! சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடிகாலையிலேயே தயார் செய்து விற்று வந்தார். இவரது இந்த கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள்,

கேஸ் அடுப்பு வழங்கினார்
இந்த சேவை முதன்முதலாக வெளியே தெரிந்தது குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டிய போது தான், அதன் பிறகு பலரும் கமலாத்தாள் பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.

கமலாத்தாள்
தொடர்ந்து மலிவான விலையில் மக்களுக்கு உணவு வழங்கி வந்த கமலாத்தாள், சொந்த இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இந்தச் சேவையை வழங்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கி உள்ளது.

ஆனந்த் மகேந்திரா பரிசு!
மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications