அண்ணாமலைக்கு அங்கே இருந்து ‘பேமெண்ட்’ வருது.. கோவை அதிர்ச்சி.. சந்தேகம் கிளப்பும் திமுக நிர்வாகி!
கோவை : கொங்கு மண்டல வளர்ச்சியை தடுக்க கர்நாடக தொழில் அதிபர்களிடம் அண்ணாமலை மாதம் மாதம் பணம் வாங்குகிறாரோ என சந்தேகம் வருகிறது என திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் அருகே கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்.
கோவையை குறிவைத்து சசித் திட்டங்கள் நடப்பதாகவும் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவினர் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
கோவை கார் வெடி விபத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு பூதாகரமாக்குவதாகவும், இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கோவை சம்பவம் - அண்ணாமலை காட்டம்
கோவை உக்கடம் அருகே நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வருகிறார். குறிப்பாக திமுக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் மெத்தனத்தால் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், கோவை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். உளவுத்துறையை தமிழக அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை என்றும், அரசு அரசியல் ரீதியாக உளவுத்துறையைப் பயன்படுத்தியதால் தான் இந்த சம்பவமே நடந்துள்ளது என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

போலீசார் மீது விமர்சனம்
மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பி இருந்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தமிழக காவல்துறை அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தது. இதையடுத்து, டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல் துறையினராக இல்லாமல் திமுகவினர் போல் செயல்படுகிறார்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.

கோவை மக்களை பயமுறுத்த
கோவையில் கோவில் அருகே நடைபெற்ற சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறார் அண்ணாமாலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, உண்மைக்கு மாறான கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிப்பதாகவும், கோவை மக்களை பதற்றத்தில் ஆழ்த்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அமைச்சர் vs செந்தில் பாலாஜி
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்களை கூறி வரும் பாஜக மாநில தலைவரை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதால் ஆத்திரமடைந்து அவர்களை விமர்சித்த அண்ணாமலை, தன்னிடம் உள்ள ஆதாரங்களை என்.ஐ.ஏவிடம் கொடுக்க தயார். மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை கொடுக்கிறேன். ஆதாரங்களை கொடுத்தால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

பந்த் - பல்ட்டி
இதற்கிடையே, கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில், 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என அக்கட்சியின் சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். ஆனால், இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தபோது, நாங்கள் பந்த் அறிவிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு கோர்ட்டில் தெரிவித்தது. பந்த் எனும் பெயரில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக இழிவான அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் இருந்து பணம்
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி அண்ணாமலை வதந்திகளைப் பரப்பி கொங்கு மண்டலத்தின் (கோவை) வளர்ச்சிகளை தடுக்கிறார்!! இதற்காக கர்நாடக தொழில் அதிபர்களிடம் மாதாமாதம் பணம் வாங்குகிறாரோ என சந்தேகம் வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications