தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர்.. தொண்டர் வீட்டில் சூடாக தேநீர் அருந்திய ஜேபி நட்டா!
கோவை: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வருகை தந்தார். இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜேபி நட்டா, பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அன்னூர் நல்லிசெட்டிப்பாளையத்தில் உள்ள பாஜக கிளைத்தலைவர் மூர்த்தி என்ற தொண்டரின் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யூகங்களை பாஜக வகுத்து வருகிறது.
தேர்தலுக்கான பணிகளை பாஜக தற்போது முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று கோவைக்கு வருகை தந்தார்.

ஜேபி நட்டா ஆலோசனை
இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வருகை தந்தார். ஜேபி நட்டாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வகிகளுடன் ஜேபி நட்டா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மேட்டுப்பாளையம் சென்ற ஜேபி நட்டா, காரமடை அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாஜ்பாய் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

உலகமே பாராட்டுகிறது
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னோக்கி செல்கிறது. இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது. வலிமையுடன் முன்னேறி வரும் இந்தியா உலகின் தலைசிறந்த தலமையாக மாறும். இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகமே வியந்து பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

தி.மு.க.வுக்கு குடும்பம்தான் முதலில்
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. நாங்கள் நாட்டை பாதுகாக்கிறோம். அவர்கள் குடும்பத்தை மட்டுமே பாதுகாக்கிறார்கள். பி.ஜே.பி.க்கு நாடுதான் முதலில். கட்சி 2-வதுதான் .ஆனால் தி.மு.க.வுக்கு குடும்பம்தான் முதலில், கட்சி 2-வதுதான், நாடு கடைசியில்தான். நாட்டை வலிமையான பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுகிறோம். ஆனால், இவர்கள் நாட்டின் வலிமையை குறைக்கத்தான் பார்க்கிறார்கள். காங்கிரசும் இதேபோல் தான் உள்ளது.

பாஜகவை வெற்றி பெற செய்யனும்
ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். அதில் ஒற்றுமை இல்லை. நாட்டை பிளவு படுத்தும் சக்திகள் தான் அதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கட்சியும் குடும்ப அரசியலிலதான் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, மக்கள் நலன் பெற வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்று பேசினார்.

தொண்டர் வீட்டில் தேநீர்
பின்னர் பொதுக்கூட்டம் முடிந்ததும், அன்னூரின் நல்லிசெட்டிப்பாளையத்தில் உள்ள பாஜக கிளைத்தலைவர் மூர்த்தி என்ற தொண்டரின் வீட்டிற்கு சென்ற ஜேபி நட்டா தேநீர் அருந்தினார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் உடன் சென்றனர். அதன்பிறகு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்ட ஜேபி நட்டா, இரவில் அங்கேயே தங்குகிறார். பின்னர் நாளை காலை 10 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வரும் ஜேபி நட்டா அங்கிருந்து விமானம் மூலமாக புவனேஷ்வர் செல்கிறார்.












Click it and Unblock the Notifications