கோவை மாநாட்டில் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. உச்சி குளிர்ந்த ஜவுளித் துறையினர்.. முக்கிய அறிவிப்பு
கோவை: இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு, சமூக நீதியுடன் கூடிய பரவலான வளர்ச்சியை உறுதி செய்வதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்றும், அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச ஜவுளித் துறை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றியனார். அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோமொபைல், ஐடி மற்றும் காலணி உற்பத்தி போன்ற துறைகளைப் போலவே ஜவுளித் துறையும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

ஜவுளி வணிகம்
குறிப்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகத் தமிழ்நாடு பெருமை பெற்றுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி வணிகத்தில் மாநிலத்தின் பங்கு 33 சதவீதமாக உள்ளது. இத்துறை நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, அதில் 60.12 சதவீதம் பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
துணியியல் துறை
ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு திராவிட மாடல் அரசு துணியியல் துறை என்ற தனித்துறையை உருவாக்கியுள்ளது. இத்துறையை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்ல அமைச்சர் காந்தி மற்றும் அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய சந்தைகளைக் கண்டறிவது மற்றும் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.
20 சதவீத மூலதன மானியம்
இந்திய - ஐரோப்பிய யூனியன் வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ள சூழலில், இந்த மாநாடு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2025-2026 வெளியிடப்பட்டது. மேலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும்.
சர்வதேச தொழில் முனைவோருக்கு அழைப்பு
இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே கோவை, மதுரை, தூத்துக்குடி மாநாடுகள் மூலம் 9,764 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய மாநாட்டிலும் 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார். மேலும், சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்குமாறு சர்வதேச தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்து, மாநாடு வெற்றிபெறத் தனது வாழ்த்துகளுடன் உரையை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications