எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர்..ராமர் கெட்டப்பில் அண்ணாமலை! போட்டோ ஷாப்பில் சிஎம் ஆக்கிய கோவை பாஜக!
கோவை : கோவை அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரை வரவேற்க பாஜகவினர் வைத்த போட்டோ ஷாப் பேனர்கள் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.
கோவை புறநகர் பகுதியான அன்னூரில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி அன்னூர் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூர் சந்திப்பில் ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த போராட்டத்தில் கண்டன உரையாற்றினார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு..மேலும் 3 பேர் கைது..என்ஐஏ விசாரணை
அண்ணாமலை
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,"திமுக எப்போதும் பின்னாடி கேட்டில் வந்து தான் பழக்கம்.நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து இட்டுள்ளனர். விவசாயிகளை புரிந்து கொண்ட கடைசி தலைவர் கர்ம வீரர் காமராஜர்.அன்னுர் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பவில்லை.காலம் காலமாக விவசாய மண்ணில் வாழ்ந்து வருபவர்கள். தொழில் பேட்டை வந்தால் அமைச்சர்களுக்கே லாபம். சிப்காட் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
அன்னுரில் ஒரு பிடி மண்ணை எடுத்தாலும் "உயிர் இருக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன்". தைரியம் இருந்தால் ஒரு பிடி மண்ணை எடுத்து பாருங்கள். அரசாணையை எடுங்கள் என கெஞ்ச மாட்டோம். திமுக அரசுக்கு ஈகோ அதிகம். திமுக கூட்டணி கட்சிகளை போல நாங்கள் அடிமை இல்லை.காலவரையற்ற உண்ணா விரதம் இருப்பேன். எவ்வளவு முறை வேண்டுமானலும் சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள். 1 லட்சம் கோடிக்கும் மேல் பணம் வைத்துள்ள கட்சியை 4 எம்.எல்.ஏ.க்களையும், தொண்டர்களையும் மட்டும் வைத்து எதிர்க்கிறோம் என உரையாற்றினார்.
போராட்டம்
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் விதமாக சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் பாஜகவினர் சாலை நெடுகிலும் கொடிக்கம்பங்களையும் பேனர்களையும் அமைத்திருந்தனர். நேற்று மாலை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு போலீசார் பாஜகவினரை அறிவுறுத்தினர். அவற்றை அகற்ற முடியாது என பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேனர்கள்
இதைத்தொடர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அண்ணாமலை வருகையை முன்னிட்டு கோவை அன்னூர் பகுதியில் பல இடங்களில் விதிமுறைகளை மீறி கொடிக்கம்பங்களும் பிளக்ஸ் பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தது.
எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர்
அண்ணாமலையை வரவேற்கும் விதமாக போட்டோ ஷாப்பிலும் பாஜகவினர் கலந்து கட்டி அடித்திருந்தனர். ராமர் வேடத்தில் வில் அம்புடன் காவி உடையில் அண்ணாமலை இருப்பது போலவும், கோட்டையில் பாஜக துண்டுடன் கையெழுத்திடுவது போலவும் அமைத்திருந்தனர். குறிப்பாக எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் கெட்டப்பில் அண்ணாமலைக்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.