ஆவ்! ஆய்வுக்குச் சென்றபோது வழுக்கி விழுந்த பெண் கவுன்சிலர்! எலும்பு முறிவால் மருத்துவமனையில் அனுமதி
கோவை : கோவை மாநகராட்சி வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி அமைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் வழுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக அங்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
திமுக கூட்டணி கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய அளவிலான பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக 3 இடங்களிலும், 1 இடத்தில் எஸ்டிபிஐ கட்சியும் வெற்றி பெற்றது.

கோவையில் படகு சவாரி
இதனையடுத்து மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றனர். தொடர்ந்து குழுத்தலைவர் , மண்டலத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கும் திமுகவினர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நேற்று கோவை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவையில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி அமைக்க வேண்டும் என்பது கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்த நிலையில் இது தொடர்பாக மாநகராட்சி மண்டலம் மற்றும் குழுத் தலைவர்கள் அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். படகு சவாரி அமைப்பது தொடர்பாக ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின், மத்திய மண்டல குழு தலைவர் மீனாலோகு, நிதி குழு தலைவர் முபாசீரா, பணிக் குழுத் தலைவர் சாந்தி முருகன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கீழே விழுந்த கவுன்சிலர்
ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் அங்கிருந்து புறப்பட்டு வந்தபோது, குளத்தில் சிறு பாலத்தை கடக்க முயன்ற 63வது வார்டு கவுன்சிலரும், பணிகள் குழு தலைவருமான சாந்தி முருகன் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்தார். அய்யோ என கதறி விழுந்த அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அறுவை சிகிச்சை மூலம் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் கோரிக்கை
இந்த நிலையில் சாந்தி முருகன் விழுந்த அதே இடத்தில் இதற்கு முன் பல தருணங்களில் மக்கள் விழுந்துள்ளதாகவும் அங்கு விபத்தை தடுக்க ஒரு சிறு தடுப்பு கூட அமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அங்கு விளையாடும் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் குளத்தில் தவறி விழும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிகாரிகள் உடனடியாக இந்த பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications