கோவை டூ கேரளா.. இளம்பெண்ணை திருமணம் செய்ய சைக்கிளில் புறப்பட்ட பொறியாளர்..அசரவைக்கும் காரணம்! அடடா
கோவை: கேரளாவில் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் வருங்கால மனைவியை கரம்பிடிக்க பொறியாளர் ஒருவர் கோவையில் இருந்து குருவாயூருக்கு சைக்கிளிலேயே புறப்பட்டு சென்றுள்ளார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் சிலர் தங்களின் திருமணத்தின்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இயற்கையை காக்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு வாசகங்களை பத்திரிகைகளில் அச்சிடுகின்றனர்.
மேலும் சிலர் திருமண விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு செடிகள், விதைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தான் கோவையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் தனது திருமணத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒன்று வழங்கும் நோக்கில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

கேரளா மணப்பெண்
கோவை தொண்டாமுத்தூர் காளிக்கநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த ‛ஸ்பிரெட் லவ் புவண்டேஷன்' நிறுவனர் சிவசூர்யா (வயது 28). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அஞ்சனாவுக்கு கேரளாவை சேர்ந்தவர்.

கேரளாவில் திருமணம்
இதனால் சிவசூர்யா-அஞ்சனா திருமணத்தை கேரளாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் நாளை கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. சிவசூர்யா குடும்பத்தினரும் கேராளா புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தான் தனது திருமணத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்த சிவசூர்யா முடிவு செய்தார்.

சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
சிவசூர்யா பசுமையான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனால் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவசூர்யா இன்று கோவையில் இருந்து கேரளா மாநிலம் குருவாயூருக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சைக்கிளில் கேரளா செல்லும் சிவசூர்யா தனது வருங்கால மனைவி அஞ்சனாவை கரம் பிடிக்க உள்ளார்.

சைக்கிள் பயணத்தில் சாதனை
இதுபற்றி சிவசூர்யா கூறுகையில், ‛‛ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதற்காக நான் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து 1902 கிமீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். இது சாதனையாக உள்ளது.

விழிப்புணர்வுக்கு காரணம் என்ன?
நான் ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்தவன். கடந்த 5 வருடங்களுக்கு முன் எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதனை விழிப்புணர்வாக மேற்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி பசுமை இந்தியா, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். திருமணத்தின்போது இந்த விழிப்புணர்வை செய்வதில் மகிழ்ச்சி'' என்றார்.

வாழ்த்து
தந்தையின் இறப்பால் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகம் சிவசூர்யா, தனது திருமண சந்தர்ப்பத்திலும் அதனை மேற்கொண்டு வருகிறது. இவரது இந்த விழிப்புணர்வுக்கும், அவரது இல்லற வாழ்க்கைக்கும் நாமும் வாழ்த்து தெரிவிக்கலாமே. வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications