விவசாயி கன்னத்தில் அடித்த கிராம நிர்வாக உதவியாளரை டிஸ்மிஸ் செய்க - அன்னூரில் தொடர் போராட்டம்
விவசாயி கோபால்சாமியை தாக்கிய முத்துச்சாமி, அரசு அதிகாரிகளுக்குத் தவறான தகவல்களை அளித்த விஏஓ கலைச்செல்வி உள்ளிட்டோரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி அன்னூர் பகுதி விவச
கோவை: விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக அன்னூர் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கோபால்சாமியை தாக்கிய விஏஒ அலுவலக உதவியாளர் முத்துச்சாமி, அரசு அதிகாரிகளுக்குத் தவறான தகவல்களை அளித்த விஏஓ கலைச்செல்வி ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் கலைச்செல்வி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபால்சாமி என்பவர் காலில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி என்பவர் விழும் வீடியோ சமூக வலைத்தளத்திர் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சிகள் பற்றி நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருந்தார்.. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரான் தெரிவித்திருந்தார்.

விவசாயி மீது வழக்கு
விசாரணைக்கு பின்னர் கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், அதே வேளையில் விவசாயி கோபால்சாமி காலில் , கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்தற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

விவசாயி கோபால்சாமி மீது வழக்கு
விவசாயி கோபால்சாமி மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விஏஒ கலைச்செல்வி புகாரில் ஒரு வழக்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் கீழ் ஒரு வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னத்தில் அறைந்த முத்துச்சாமி
விவசாயியான கோபால்சாமி தனது நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி கொண்டிருந்தபோது அலுவலக உதவியாளர் முத்துசாமிதான் திடீரென கோபால்சாமியை கன்னத்தில் பலமாக அறைந்து கீழே தள்ளியதாகவும், முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கோபால்சாமி கூறவே இல்லை என அவரது தரப்பில் பதில் புகார் அளிக்கப்பட்டது.

முத்துசாமி அடித்த காட்சிகள் வெளியானது
இந்நிலையில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமி அடித்து கீழே தள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். தன்னை அறைந்து தள்ளிவிட்டது வீடியோவாக எடுக்கப்பட்டது தெரிந்ததும், முத்துசாமி நாடகமாடி கோபால்சாமி காலில் விழுந்ததாகவும் தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின.

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
இந்த விவகாரத்தை வேண்டுமென்று திட்டமிட்டு சாதிரீதியாக முத்துசாமி தவறாக சித்தரித்ததும் விசாரணையில் தகவல் வெளியானது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் விசாரணையின்போது பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காகவும், மனு கொடுக்க வந்த கோபால்சாமியை அடித்ததற்காகவும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் கோவை வடக்கு கோட்டாட்சியர் ரவிசந்திரன் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்தார். இதே போல் அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம், ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துச்சாமியை பணியிடை நீக்கம் செய்தார்.

குற்றவியல் வழக்குப் பதிவு
இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அன்னூர் காவல் நிலையத்தில் கிராம உதவியாளர் முத்துசாமி மீது காயம் ஏற்படுத்துதல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள அன்னூர் காவல்துறையினர் , ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து, தவறான நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அன்னூர் பகுதி விவசாயிகள், கோபால்சாமியை தாக்கிய முத்துச்சாமி, அரசு அதிகாரிகளுக்குத் தவறான தகவல்களை அளித்த விஏஓ கலைச்செல்வி உள்ளிட்டோரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயி மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்ய வலியுறுத்தல்
விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக அன்னூர் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அன்னூர் தாலுக்காவுக்கு உட்பட்ட அன்னூர், குன்னத்தூர், கணேசபுரம், பொன்னே கவுண்டன் புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இரண்டு நாட்களாக அடைக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் விவசாய அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை
விவசாய அமைப்பினரின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி, ரேஸ்கோர்ஸ் மேற்கு மண்டலகாவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐஜி சுதாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கணேசன், காளிச்சாமி, நடராஜ், வேணுகோபால் ஆகியோர் விவசாய அமைப்புகளின் சார்பில் கலந்துகொண்டனர். விவசாய அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்தை கைவிட வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தினர். அதற்கு, தங்களது சங்க நிர்வாகிகளுடன் கலந்துஆலோசித்து பதில் தெரிவிக்கப்படும் என விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications