அமமுகவுடன் திமுகவுக்கு உறவு உள்ளது.. ஆதாரம் இதோ.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேட்டி
கோவை: திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நடுவே, நெருக்கம் இருப்பது அம்பலப்பட்டுவிட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது: திமுக மற்றும் அமமுக கட்சிகளுக்கும் நடுவேயுள்ள நெருக்கம் இப்போது வெளிப்பட்டு விட்டது.
அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்ட, சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக அதிமுக கொறடா புகார் அளித்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஏன் கொந்தளிக்கிறார் என்பது தெரியவில்லை.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் இயக்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம். அப்படியிருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு எவ்வளவு கோபம் வருகிறது? இதனால்தான், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார்.

கொந்தளிப்பு ஏன்
எதிர்க்கட்சி தலைவரின் பேச்சிலிருந்தும், கொந்தளிப்பில் இருந்தும், இரு கட்சிகள் இடையே உள்ள நெருக்கம் தெரிய வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திமுக நோட்டீஸ்
தினகரன் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில், அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ளது திமுக. இந்த நிலையில்தான், முதல்வர், இவ்வாறு கூறியுள்ளார்.

குடிநீர் பிரச்சினை
இதனிடையே, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறதே என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, குடிநீர் தட்டுப்பாட்டை பொறுத்தளவில் ஏற்கனவே அதிகாரிகளுடன், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உரிய முறையில் நடவடிக்கை எடுத்து தமிழகம் முழுக்க எங்கும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். குடிநீர் பிரச்சினை எழும் இடங்களில், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications