கோவையில் வேட்புமனு விவகாரத்தில் அண்ணாமலையை அதிர வைத்த நாதக வேட்பாளர் கலாமணி.. யார் தெரியுமா?
கோவை: கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோரை பற்றி அறிந்திருப்பீர்கள்.. அங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலாமணியை பற்றி தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்...
கோவை லோக்சபா தொகுதி விஐபி தொகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம்.. கோவை மாநகரம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். இங்கு பாஜக கூட்டணி சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

ஆனால் கோவையில் மும்முனை போட்டி இல்லை.. நான்கு முனைப்போட்டியாகும். அங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 36 வயதாகும் கலாமணி என்பவர் போட்டியிடுகிறார். அவர் கோவை காளப்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய கணவர் ஜெகநாதன் தனியார் நிறுவனத்தில் வேலை மேலாளராக பணியாற்றுகிறார். கலாமணி பிஎஸ்சி படித்த பட்டதாரி ஆவார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கலாமணி தனக்கு ரூ.47.49 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், கணவா் ஜெகநாதனுக்கு ரூ.34.14 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.1.80 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.60.10 லட்சம் வங்கிக் கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டியில், கோவையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு எல்லாம் தீர்வு காண வேண்டும். ஜிஎஸ்டி வரி, சூயஸ் குடிநீர் முக்கியமான பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்வேன். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கோவையில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மும்முனை போட்டி இல்லை. நான்கு முனை போட்டி உள்ளது. நாங்கள் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறினார்.
மேலும் கோவையில் தற்போது தொழில் துறை முடங்கியிருப்பதற்கு மத்திய பாஜக அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டியும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்தான் காரணம் என்று குற்றம்சாட்டிய கலாமணி, கோவையில் வட மாநிலத்தவர்களுக்கு அதிகளவில் வேலை வழங்கப்படுவதாகவும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் இவற்றை நாங்கள் சரிசெய்வோம் என்றும் கூறினார். மற்ற கட்சிகளைப்போல பொய்யான வாக்குறுதியை நாங்கள் கொடுப்பதில்லை. எங்களிடம் அதிகாரம் கிடைக்கும்போது மக்களின் எல்லா பிரச்னைகளுக்கும் தீா்வு காண்போம் என்று நாதக வேட்பாளர் கலாமணி கூறியிருந்தார்.
முன்னதாக கடந்த இரண்டு நாள் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் பிரச்சனை இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியதும் கலாமணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications