'கும்பலா ரவுடிங்க இறங்கிட்டாங்க..கோவைக்கு துணை ராணுவத்தை அனுப்புங்க' - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
கோயமுத்தூர்: தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் துணை இராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கோயமுத்தூர்
தமிழகத்தில் 2016-க்குப் பிறகு தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோயமுத்தூர் மாநகராட்சி இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வேலுமணி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம்.

காவல்துறை
திமுக என்ன சொல்கின்றதோ, அதை மட்டும்தான் காவல்துறை செய்கிறது. போலீஸ் துணையுடன் பணம், பரிசுப்பொருள், கொலுசு, ஹாட்பாக்ஸ் போன்றவற்றை திமுக விநியோகித்து வருகிறது. கோயமுத்தூரில் எந்தவிதத்திலும் தேர்தல் விதிமுறையை காவல்துறை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் இணக்கமாக நடக்காவிட்டால் பணி மாறுதல் செய்யப்படுவீர்கள் என திமுகவினர் காவல்துறையை மிரட்டி வருகின்றனர்.

பொய் வழக்கு
இந்தத் தேர்தலில், திமுகவை எதிர்த்து வாக்கு சேகரித்தாலோ, எதிர்த்து பேசினாலோ அவர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு போடுகிறது. புகார் கொடுப்பவர்கள் மீதே காவல்துறை எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர். கோவையில் இது தொடர்ந்து நடந்து வருகிறது.

ராணுவம்
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திமுகவுக்கு துணையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். மக்கள் பயமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் துணை இராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும்'' என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் எஸ்.பி.வேலுமணி.












Click it and Unblock the Notifications