கொங்குவுக்கு “ஸ்கெட்சு”.. 2024 தேர்தலில் பாஜகவின் “மெகா பிளான்”! நாளை கோவை வருகிறார் ஜே.பி.நட்டா
கோவை: 2024 லோக் சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி உள்ளது. அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் நாளை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கும் கட்சி முகவர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த ஜூலை மாதம் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிமுகம் செய்தார்.
தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் சூழலில் தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வந்து சென்று உள்ளார்.

ஜேபி நட்டா வருகை
அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்திருந்தார். இந்த நிலையில்,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நாளை (27 ஆம் தேதி) மாலை பா.ஜ.க வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் பொது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள இருக்கிறார்.

முகவர்கள் கூட்டம்
கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் மேட்டுப்பாளையம் நாலு ரோட்டில் அமைந்து உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இரு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டசபை தொகுதிகளில் இருக்கும் 9,000 க்கும் அதிகமான வாக்குச் சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆலோசனை
இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்தும், தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் வாக்குச் சாவடி முகவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்க உள்ளார்.

பொதுக்கூட்டம்
மேட்டுப்பாளையத்துக்கு வருகை தர இருக்கும் ஜே.பி.நட்டாவுடன், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் முகவர்கள் கூட்டம் நடந்து முடிந்தவுடன் அதே பகுதியில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசும் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது.

முன்னேற்பாடு பணி
இதனை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேடை மற்றும் அரங்குகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கூட்டம் நடைபெறும் இடம் முழுவீச்சில் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

சுதாகர் ரெட்டி
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்து இருக்கும் தென் திருப்பதி நால்ரோட்டில் பாஜக தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகளை பாஜக மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாஜக தலைவர்கள் ஆய்வு
அப்போது போது மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், ஊடக பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், நீலகிரி மாவட்ட நந்தகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications