சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு .. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் உயிரிழந்தது தொடர்பாக தனிப்படை போலீசார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான குணசேகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், பங்களாவுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் இறந்தனர்.
சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு.. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
தனிப்படை விசாரணை
இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை விசாரிக்கப்பட்டவர்கள்
இதுவரை சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அவரது உதவியாளா் நாராயணசாமி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரா் சிபி, மற்றொரு சகோதரரான சுனில், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான பிஜின் குட்டியின் சகோதரா் மோசஸ், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கண்ணன், மணல் ஒப்பந்ததாரா் ஆறுமுகசாமி, அவரது மகன் தொழிலதிபா் செந்தில்குமாா், புதுச்சேரியில் உள்ள ஓஷன் ஸ்பிரே ரிசாா்ட் நிறுவனத்தின் உரிமையாளா் நவீன் பாலாஜி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் அண்மையில் விசாரணை நடத்தினா்.
முன்னாள் எம்எல்ஏ-விடம் விசாரணை
இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வைத்து மூன்றாவது முறையாக தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினா். ஏற்கனவே ஆறுக்குட்டியிடம் 3 ஆண்டுகளுக்கு முன்னா் விசாரணை நடத்தப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரான கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த இவர், ஆறுக்குட்டியிடமும் ஓட்டுநராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
Recommended Video
ஜெ. கார் ஓட்டுநரிடம் விசாரணை
இந்த நிலையில் கனகராஜ் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.