வாக்குச் சீட்டில் மாயமான நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம்-கோவையில் புகார்!
கோவை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னமே வாக்குச் சீட்டில் ஒட்டப்படாமல் இருந்ததால் சர்ச்சை எழுந்தது.
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இத்தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வினோத புகார் ஒன்று எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பொறிக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் கரும்பு விவசாயி என எழுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதன் பின்னரே வாக்குச் சீட்டில் கரும்பு விவசாயி சின்னத்தை அதிகாரிகள் ஒட்டியிருக்கின்றனர். இதனால் கோவையில் சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.