விடுவதாக இல்லை கமல்ஹாசன்.. கோவையிலேயே முகாம்.. காலையிலேயே ஸ்பாட் விசிட்! பரபரத்த இவிஎம் மையம்
கோவை: தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தாலும் வந்தது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையிலேயே முகாமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு சென்று அங்கு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இன்று காலை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தன. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கான பெட்டியில் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தீவிர ஆய்வு
அங்கு தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து இன்று காலையே அங்கு விரைந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி ம.நீ.ம வேட்பாளருமான கமல்ஹாசன். நேரில் பார்வையிட்டு நிலவரங்களை ஆய்வு செய்தார்.
நடந்தே சென்றார்
பாதுகாப்பு அறைக் கட்டிடங்கள் வரை மிஷின்களை ஏற்றி வந்த லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன என்பதால், நுழைவாயிலில் இருந்து உள்ளே, அறைவரை கமல்ஹாசன் நடந்தே சென்றார். அங்கு கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறையையும் அவர் பார்வையிட்டார்.
திரும்பினார்
அங்கு ஆய்வை முடித்துவிட்டு டூவீலரில் நுழைவாயில் பகுதிக்கு வந்தார் கமல்ஹாசன். அங்கிருந்து தனது காரில் ஏறி தான் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார்.
விடாத கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் தரப்பு, ஓட்டுக்கு பணம் தருவதாக புகார் வந்தது. எனவே சென்னையில் குடும்பத்தோடு ஓட்டு போட்ட கமல்ஹாசன் உடனே ஹெலிகாப்டரில் புறப்பட்டு 4 மணி நேரத்திற்குள் கோவை சென்று சேர்ந்தார். அங்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தார். முறைகேடு புகார் பெரிதானதால் அங்கேயே அவர் தங்கிவிட்டார். இன்றும் ஆய்வுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.