கோவையில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளை.. பட்டப்பகலில் பெரிய ஸ்கெட்ச்
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வரும் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 60 பவுன் தங்க நகையை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். சுமார் 30 லட்சம் மதிப்புள்ள அந்த தங்க நகைகளை அதுவும் பட்டப்பகலில் காரில் வந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இத்தனைக்கும் வீட்டின் உரிமையாளர், அப்போது வீட்டிற்கு வந்துள்ளார். அவர்களை பார்த்துள்ளார். அப்போது நடந்தவற்றை பார்ப்போம்.
கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையைச் சேர்ந்த 45 வயதாகும் குமார் என்பவர், அங்குள்ள செல்வராஜ் (70) என்பவரின் மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குமார், கோவை பூ மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (41). இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். குமார் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓட்டல் மற்றும் மளிகை கடைக்கு வியாபாரத்திற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அக்டோபர் 21ம் தேதியான நேற்று பிற்பகல் 2 மணிக்கு குமாரின் வீட்டில் இருந்து முகமூடி அணிந்தபடி 2 பேர் வெளியே வந்திருக்கிறார்கள். பின்னர் வேகமாக வீட்டின் வெளியே இருந்த காரில் ஏறியுள்ளார்கள். அதை அந்த வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் பார்த்துவிட்டு அருகே சென்றார். உடனே அவர்கள் காரின் கதவை பூட்டினர். அருகில் சென்ற அவர் காரின் கதவில் இருந்த கண்ணாடியை தட்டி பார்த்துள்ளார்.
ஆனால் அவர்கள் கார் கதவை திறக்காமல் உடனே வேகமாக சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ், மாடிக்கு சென்று பார்த்தபோது குமாரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்திருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, கொள்ளையர்கள் வந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து குமார் உடனடியாக விரைந்து வந்து பார்த்துள்ளார். பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. அதில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்றார்.
இது குறித்து குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தார்கள். மேலும் மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய், கொள்ளை நடந்த குமாரின் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று, மீண்டும் வீட்டுக்கு திரும்பிவிட்டது. இதையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து 2 பேர் குமார் வீட்டுக்குள் சென்று திரும்பியதை பார்க்க முடிந்தது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமார் வீட்டில் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பிடிக்க கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டல் உரிமையாளர் குமார் வீட்டில் கொள்ளையடித்துச்சென்ற நபர்கள் தப்பிய கார் நெல்லை மாவட்டம் பதிவு எண் கொண்டது என்பதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார், விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குமார் வசித்த வீடு அருகே உள்ள வீடு கடந்த 4 மாதமாக காலியாக இருக்கிறது. அங்கு சிலர் அடிக்கடி வந்து சென்று வந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் யாராவது குமாரின் வீட்டில் திருடினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications