மநீம நிர்வாகிகள் வரிசையாக ராஜினாமா.. கோவை மண்டல ஐடி செயலாளர் விலகல்.. தொடர்ந்து அமைதி காக்கும் கமல்
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் வரிசையாக ராஜினாமா செய்து வரும் நிலையில், அக்கட்சியின் கோவை மண்டல ஐடி பிரிவு செயலாளர் புஷ்பராஜும் அக்கட்சியில் விலகியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளைத் தாண்டி அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளும் களத்தில் இருந்தன.
அதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுக்கு தாங்கள் தான் உண்மையான மாற்று என்ற முழக்கத்தைக் கமல் முன்னெடுத்தார்.

மக்கள் நீதி மய்யம்
சட்டசபைத் தேர்தலைச் சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தார். இருப்பினும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் படு தோல்வியடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் தலைவர் கமல்கூட கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வரிசையாகக் கட்சியிலிருந்து விலகி வந்தனர்.

நிர்வாகிகள் விலகல்
அக்கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட பொன்ராஜ், சிகே குமரவேல், மௌரியா, சந்தோஷ்பாபு உள்ளிட்ட பலரும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினர். குறிப்பாக. அக்கட்சியின் துணைத் தலைவரும் கொங்குப் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் முகமாகத் திகழ்ந்தவருமான மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகினார். மேலும், கட்சி நிர்வாகிகளின் குரலுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் தேர்தலுக்குப் பின்னரும்கூட கமல் மாறவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

திமுக
இருப்பினும், அப்போது அவர் அரசியலில் தொடர்ந்து பயணிப்பேன் என்றே குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். அவருடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் திமுகவில் ஐக்கியமாகினர்.

ஐடி அணி செயலாளர்
இந்நிலையில். தற்போது மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த செயலாளர் புஷ்ப ராஜும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலின்போது அக்கட்சி தகவல் தொழில் நுட்பத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

கமல் அமைதி
இந்நிலையில், இவர் கடந்த வாரம் கட்சிப் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். இப்படி முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வரும் நிலையிலும்கூட, இது குறித்து கமல் எந்த கருத்தும் கூறாமல் இருப்பது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications