சீனுக்கு வந்த நாஞ்சில் சம்பத்.. வேலி தாண்டும் “வெள்ளாடு”! கோவை கார் வெடிப்பு பற்றி ட்வீட் - யாரது?
கோவை: கார் சிலிண்டர் வெடித்த விபத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், வேலி தாண்ட எத்தனிக்கிறது ஒரு வெள்ளாடு என்று விமர்சித்து உள்ளார் திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
கடந்த ஞாயிறு அன்று அதிகாலை 4.10 மணியளவில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் என்ற நபர் உயிரிழந்தார்.
போலீஸ் நடத்திய விசாரணையில் ஜமேஷ் முபினின் வீட்டில் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரோடு தொடர்புடைய 5 பேரை இன்று யுஏபிஏவின் கீழ் கைது செய்தது. அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அண்ணாமலை ட்வீட்
இந்த நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். "கோவை சிலிண்டர் வெடிப்பு என்பது வெறும் சிலிண்டர் வெடிப்பு அல்ல. இது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது.

தாக்குதலுக்கு திட்டம்
இது தமிழ்நாடு மாநில உளவுத்துறை மற்றும் திமுகவின் தோல்வி இல்லையா? குற்றம்சாட்டப்பட்டவர் தாக்குதலுக்கு திட்டமிட்டபோது உயிரிழந்து இருக்கிறார். இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் மறைக்காமல் வெளியில் வந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்." என்று விமர்சித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, "தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.

காவல்துறை நடவடிக்கை
கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.

ரத்தவெறி சாத்தான்கள்
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். 'நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க' என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது." என்று விமர்சித்தார்.

நாஞ்சில் சம்பத்
இந்த நிலையில் திராவிட பேச்சாளரான நாஞ்சில் சம்பத் #CoimbatoreBlast என்று ஹேஷ்டேகுடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "வேலி தாண்ட எத்தனிக்கிறது ஒரு வெள்ளாடு.! விழிப்போடு இருக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமை. இது பெரியாரின் பூமி. வெறுப்புக்கும் பகைக்கும் இங்கே இடமில்லை..!" என்று விமர்சித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications