கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு.. மேலும் இருவரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்.. கோவையில் பரபரப்பு!
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சேக் இதாயத்துல்லா, சனோஃபர் அலி ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர்.
கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த முபின் வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் வெடி மருந்துகளும் சிக்கின.

கோவை கார் வெடிப்பு
இதனையடுத்து காவல்துறையினருடன் என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் களமிறங்கினர். கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, சென்னை என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனடிப்படையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

என்ஐஏ விசாரணை
உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். சென்னை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

9 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் 6 பேரும் சென்னை பூவிருந்தவல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு முன் முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் 2 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோஃபர் அலி ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications