கோவையில் ஆன்லைனில் வெடி மருந்து வாங்கியவரை சுற்றிவளைத்த என்ஐஏ.. “பரபர தகவல்கள்” - சிக்கியது எப்படி?
கோவை : கோவையில் ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கிய இளைஞர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சமீபத்தில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஆன்லைனில் வெடி மருந்துக்கு பயன்படும் வேதிப் பொருட்கள் வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கோவையில் செந்தில்குமார் என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம், சல்பர் 100 கிராம் ஆகிய வெடி பொருட்களை வாங்கியதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடி விசாரணையில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

கோவை சம்பவம்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதிப் பொருட்கள் ஆன்லைனில் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்துக்கு பயன்படும் வேதி பொருட்கள் வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தில் சிக்கினார்.

இளைஞர்
கடந்த மே மாதம் கோவை குரும்பபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பிரபலமான ஆன்லைன் விற்பனை தளத்தில் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம் மற்றும் சல்பர் 100 கிராம் ஆகியவற்றை ஆர்டர் செய்து அதே மாதம் 20ஆம் தேதி வாங்கியுள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செந்தில்குமாரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோவை பீளமேடு பகுதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருவதாகவும், தன்னிடம் பணிபுரியும் மாரியப்பன் என்பவர், தனது செல்போன் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பழக்கடையில் பணியாற்றிய இளைஞர்
இதையடுத்து மாரியப்பனை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோமதி என்பவரது மகன் என்பதும், மாரியப்பன் மீது அவரது சொந்த ஊரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், கஞ்சா விற்ற வழக்கில் சிறைக்கு சென்று வந்ததும், பின்னர் செந்தில்குமார் கடையில் வேலை பார்த்தபோது ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கியதும் தெரியவந்தது.

வெடிபொருள் வாங்கிய இளைஞர்
ஆன்லைனில் தான் வாங்கிய அந்த வெடி பொருட்களுடன் தனது சொந்த ஊரான கோவில்பட்டிக்குச் சென்று, முன்விரோதம் காரணமாக மகாராஜா என்பவரை பழி வாங்க வெடிகுண்டு தயாரிக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கு சூழ்நிலை சரி இல்லாத காரணத்தால், வெடிபொருட்களுடன் சென்னை கோயம்பேடு சென்று அங்குள்ள ஒரு லாரி சர்வீஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் கோவைக்கு வந்துள்ளார்.

சிறையில்
தீவிர விசாரணைக்கு பிறகு மாரியப்பன், செந்தில்குமார் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சரவணம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாரியப்பன் வைத்திருந்த வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். கைது செய்த மாரியப்பனை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் மாரியப்பனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications