என்ன ஜோக் காட்றீங்களா.. ஓசி டிக்கெட் வேண்டாமென டிராமா போட்ட பாட்டி.. அதிமுகவினர் மீது பாய்ந்த வழக்கு
கோவை: இலவச பயணச்சீட்டு குறித்து திமுக அரசு மீது அவதூறு பரப்பியதாக கோவையைச் சேர்ந்த அதிமுகவினர் மூவர் மீது கோவை காவல்துறையினர் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். பேருந்து பயணத்தில் கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் கேட்டு சண்டை போட்ட பாட்டியை இந்த வழக்கில் சாட்சியாக மட்டுமே சேர்த்துள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதன் மூலமாக தங்களுக்கு மாதந்தோறும் பலநூறு ரூபாய் மிச்சமாவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த அளவில் தமிழக அரசின் பாராட்டைப் பெற்ற திட்டங்களில் ஒன்றாக மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமைந்துள்ளது. பெண்களுக்கு போதிய இலவச பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற சில குற்றச்சாட்டுகளும் இந்த திட்டத்தில் காணப்படுகிறது. பல பேருந்துகளில் கண்டக்டர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓடி டிக்கெட் சர்ச்சை
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பெண்கள் எல்லோரும் ஓசியாக பயணம் செய்வதாக கூறினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் அமைச்சருக்கு எதிராக பலரும் கருத்துக்களை கூறினர்.

ஓசி டிக்கெட் வேண்டாம்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவையில் பேருந்தில் ஏறிய பாட்டி ஒருவர் கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் , இது இலவச பேருந்துதான் காசு வேண்டாம் என்று கூறியும் அதை கேட்காத பாட்டி, தமிழ்நாடே ஓசியில போகட்டும்...நான் ஓசியில் போக மாட்டேன். எனக்கு காசுக்கு டிக்கெட் கொடுங்கள் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

திமுகவினர் குற்றச்சாட்டு
அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்விராஜ் என்பவர், பக்கத்து வீட்டு பாட்டியை அழைத்துச் சென்று இந்த வீடியோவை பதிவாக்கி பரப்பியுள்ளதாக, திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த முழுமையான வீடியோவை பதிவிட்டு கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்! என்று பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விளையாட்டுக்கு பேசினேன்
அமைச்சர் பொன்முடியிடம் பெண்களுக்கான ஓசி டிக்கெட் பற்றி பேசியது குறித்து நேற்றைய தினம் செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர், பேருந்தில் பெண்கள் ஓசியில் செல்கிறார்கள் என்று விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், நான் பேச்சு வழக்கில் கூறியதை தவறாக புரிந்துக்கொண்டனர் என கூறியுள்ளார்.

அவதூறு வழக்கு பாய்ந்தது
அரசுப் பேருந்தில் தகராறு செய்து அவதூறு பரப்பியதாக கோவை பாட்டி, அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுக்கரை காவல்நிலைய காவல்துறையினர் அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பாட்டி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை எனவும் பாட்டியை தூண்டி விட்டதாக அதிமுகவினர் 3 பேர் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications