3 நாட்களாக கடும் பதற்றம் எதிரொலி.. கோவை உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம்.. டிஜிபி அதிரடி!
கோவை : கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்த பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து, கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருண் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்வாரிய ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன தமிழக அரசு.. 3% உயர்வு.. 2 மாத நிலுவைத்தொகை உடனே!
என்.ஐ.ஏ சோதனை
தேசிய புலனாய்வு முகமை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்திலும் பரபர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இது ஒருபுறமிருக்க, பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி எஸ்.சி எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அன்று இரவு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன.
போலீஸ் வளையத்தில் கோவை
இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் கோயம்புத்தூரில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து கோவை பகுதியில் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களால் வழக்கத்துக்கு மாறாக பதற்றமடைந்த கோயம்புத்தூர், முழுமையாக போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது.
அதி விரைவுப்படை
24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2 ஆயிரம் போலீசார் கோவை மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 400 அதிவிரைவு படை வீரர்களும் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை அதிகாரி நியமனம்
இந்நிலையில், காலியாக இருக்கும் கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருண் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவுகளை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.