பாஜக கொடி கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு.. நாட்டை ஆளும் கட்சிக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி!
கோவை : கோவை மாவட்டம் அசோகபுரம் அருகே பாஜக கொடிக் கம்பத்தை தங்கள் ஊரில் நடக் கூடாது என பொதுமக்கள் ஆவேசமாக எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஊரில் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் அளித்து கம்பத்தையே அகற்றும்படி செய்துள்ளது சலசலசப்பை ஏற்படுத்தியது.
மற்ற கட்சிகளின் கொடிக்கம்பம் இருப்பது போல பாஜக கொடிக் கம்பமும் அங்கே இருக்க வேண்டும் என பாஜகவினர் கூறிய நிலையில், கிராம மக்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக அந்த ஊரில் தலையெடுத்தபோது, சில தீண்டாமை பிரச்சனைகள் அரங்கேறி இருக்கின்றன. அதையடுத்து பாஜகவை ஊருக்குள் அனுமதிப்பதில்லை என முடிவெடுத்து இன்று வரை அதன்படியே செயல்பட்டு வந்துள்ளனர்.

கொடி கம்பம் நட எதிர்ப்பு
கோவை மாட்டம் அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி காலனியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடிபோதை தகராறு மற்றும் தீண்டாமை பிரச்சனை காரணமாக பாஜகவை ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் காந்தி காலனியை சேர்ந்த சின்ராசு மற்றும் அவரது மகன் சேகர் ஆகியோர் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து அங்கு பாஜக கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

போலீசார்
ஆனால் நள்ளிரவு நேரத்தில் வந்து அவர்கள் பாஜக கொடிக் கம்பத்தை நட்டு வைத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த கொடிக் கம்பத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சின்ராசு, சேகர் உள்ளிட்டோர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தாமரை
இந்தியாவை கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் கட்சி பாஜக. தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு தற்போது 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமையும், தாமரை மலர்ந்தே தீரும் என பாஜகவினர் பேசி வரும் நிலையில், அந்தக் கட்சியை தங்கள் ஊருக்குள் அனுமதிக்கவே மாட்டோம் என்று கிராம மக்கள் எதிர்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயந்து ஒதுங்க மாட்டோம்
இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கும் நிலையில் பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், அடுத்தகட்டமாக கொடி கம்பம் நடுவதற்குரிய வழிகளை பார்ப்போம், பயந்து மட்டும் ஒதுங்கி விட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications