‘பெரியார்’ பெயரில் உணவகமா? கோவை கும்பலுக்கு வந்த கோபம்.. திறப்புநாளில் துவம்சம்! ஊழியருக்கு 36 தையல்
கோவை: காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் நேற்று பெரியார் பெயரில் தந்தை பெரியார் உணவகம் திறக்கப்பட்ட நிலையில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து உணவகத்தை அடித்து உடைத்து உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ளது கண்ணார்பாளையம் பகுதி. இங்குள்ள நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நேற்று திறந்தார். திறப்பு விழாவை முன்னிட்டு ஊழியர்களுடன் நேற்று உணவகத்தில் சிறப்பு ஏற்பாடுகளை பிரபாகரன் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு உள்ளே சென்ற ஒரு கும்பல் பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது கடையின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அத்துடன் அந்த கும்பல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

உணவகம் துவம்சம்
கடையில் இருந்த உரிமையாளர் பிரபாகரனை கடுமையாக தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்த கடை ஊழியர் அருண் என்பவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கிவிட்டு உணவகத்தை துவம்சம் செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

36 தையல்கள்
இந்த தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார்.

போலீசில் புகார்
இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரியாரிய அமைப்புகள் சமூக வலைதளங்களிலில் வலியுறுத்தி வந்தனர்.

5 பேர் கைது
இந்த நிலையில் தந்தை பெரியார் உணவகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோரை காரைமடை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவகம் தாக்கப்பட்ட சம்பவத்தால் காரமடையில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications