ஈரக்குலையே நடுங்குதே.. காரை வழிமறித்து சுத்தியால் தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்.. கோவையில் பயங்கரம்
கோவை: கோவையில் அருகே சினிமாவையே மிஞ்சும் வகையில் நள்ளிரவில் காரை வழிமறித்து தாக்கி, கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த முகமூடிக் கொள்ளையர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக். விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் பெங்களூரில் கணினி உதிரி பாகங்கள் வாங்கி கொண்டு தனது நண்பர்களுடன் கடந்த 13ம் தேதி இரவில் புறப்பட்டார். அவர் கோவை ழவியாக காரில் கொச்சி சென்று கொண்டிருந்தார்.

இவர்களின் கார் கடந்த 14ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவை அருகே மதுக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதாவது கோவை - பாலக்காடு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்கள் சென்ற காரை 2 கார்கள் பின்தொடர்ந்து வந்தன. இதனால் அஸ்லாம் சித்திக் மற்றும் அவரது நண்பர்கள் பயந்துப்போயினர். காரை நிறுத்தாமல் அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இந்த வேளையில் திடீரென்று அவர்களின் காரை முந்திய கார் குறுக்கே வந்து நின்றது. இதனால் வேறு வழியின்றி அஸ்லாம் சித்திக் காரை நிறுத்தினார்.
இந்த வேளையில் காரில் இருந்து 6 பேர் கும்பல் இறங்கியது. அவர்கள் முகத்தில் முகமூடி மற்றும் துணி கட்டியிருந்தனர். அதோடு கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அஸ்லாம் சித்திக் பயணித்த காரின் மீது தாக்குதல் நடத்திது. சுத்தியலால் அந்த கும்பல் கார் கண்ணாடியில் ஓங்கி அடித்தது. இதில் கார் கண்ணாடி சிதைந்த நிலையில் அஸ்லாம் சித்திக் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சுதாரித்தவர்கள் காரை பின்நோக்கி எடுத்து சென்று வேகமாக முன்நோக்கி இயக்கி அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுதொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள்,அவர்களின் பெயர்கள் சிவதாஸ், ரமேஷ் பாபு, விஷ்ணு, அஜய்குமார் என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க முயன்றதை அஸ்லாம் சித்திக் தரப்பு காரில் இருந்தபடியே செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications