செந்தில்பாலாஜி Vs எஸ்.பி.வேலுமணி... தகிக்கும் கோவை... மேயர் பதவி யாருக்கு..?
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில் திமுக, அதிமுக இடையேயான அரசியல் ஆடுபுலி ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டது முதல் அங்கு அரசியல் களநிலவரங்கள் மாறத் தொடங்கியுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை அதிமுகவின் கோட்டையாக கட்டமைத்து வைத்துள்ள நிலையில், அதனை உடைத்தெறிந்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு மீட்டிங் மேல் மீட்டிங் நடத்தி வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
எஸ்.பி.வேலுமணி Vs செந்தில்பாலாஜி... யார் கை ஓங்கும்..? களைகட்டப் போகும் கோவை அரசியல்..!
கோவை மாநகரம்
தலைநகர் சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் பிழைப்புக்காக தஞ்சம் அடையக்கூடிய ஊர் கோயம்புத்தூர். கோவை மக்களின் குணமும், குளுகுளுவென காற்றும், தொழில்வளமும் பிடித்துப்போவதால் வெளியூர்களை சேர்ந்த பலரும் கோவையிலேயே காலப்போக்கில் நிரந்தரமாக தங்கிவிடுகின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக தொடர்ந்து பலவீனமான நிலையில் இருந்து வருகிறது.
திமுக முகங்கள்
கண்ணையன், பொங்கலூர் பழனிசாமி, என கோவை மாவட்டத்தில் திமுகவை வளர்த்த பல முன்னோடிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிட்டனர். ராமச்சந்திரன், பையா கவுண்டர், சிங்காநல்லூர் கார்த்திக், பைந்தமிழ் பாரி, காரமடை சுரேந்திரன், தென்றல் செல்வராஜ், சேனாதிபதி, என கோவை மாவட்ட திமுகவின் முக்கிய முகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது இந்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கோவை அரசியலுக்கு ஷிப்ட் ஆகியுள்ள கார்த்திகேய சிவசேனாபதியும், மநீமவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுன் இருக்கிறார்கள்.
ஸ்பெஷல் நியமனம்
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக வாஷ் அவுட் ஆனதால் முதலமைச்சர் ஸ்டாலின் பயங்கர அப்செட். எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அதிரடி அரசியல் செய்யத் தவறிய கோவை மாவட்ட நிர்வாகிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருத்தமும், கோபமும் இருந்தாலும் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆட்சிப்பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதனிடையே விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால், கோவையை இப்படியே விட்டால் சரிபடாது என எண்ணிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிரடி அரசியல்வாதி என அறியப்படும் செந்தில்பாலாஜியை ஸ்பெஷல் அப்பாயிண்ட்மென்ட் செய்தார்.
உழைப்புக்கு பலன்
இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு விசிட் அடிக்கத் தொடங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக நிர்வாகிகளுடன் மீட்டிங் மேல் மீட்டிங் நடத்தி அவர்களை டிரில் எடுக்கிறார். இதனிடையே கட்சிக்காக உழைத்தும் நாங்கள் ஒரு பலனையும் அனுபவிக்க முடிந்ததில்லை என பலரும் செந்தில்பாலாஜியிடம் தனியாக சந்தித்து முறையிட்டிருக்கின்றனர். மேலும், சும்மா ஒன்றும் உழைக்கவேண்டாம், அதற்குரிய பலனை உங்களுக்கு நான் பெற்றுக்கொடுக்கிறேன் எனக் கூறி திமுக நிர்வாகிகளை சுறுசுறுப்பாக்கி வைத்திருக்கிறார். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் வார்டு வாரியாக 'மக்கள் சபை' என்ற பெயரில் மக்களை வீதி வீதியாக சந்திக்கும் பயணத்திட்டதை வகுத்து வைத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
வியூகமும் வேகமும்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் வியூகமும் வேகமும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கண்களை உருத்தத் தொடங்கியதால், அவரும் தன் பங்குக்கு இப்போது கள அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். இளைஞர்களை பெருமளவில் திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்யுள்ளார். மேயர் பதவியை கைப்பற்றி கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து தனது நிர்வாக ஆளுமையை டெல்லிக்கும், தமிழகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என மெனக்கெடுகிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
எதிர்ப்பு
சில மாதங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்து கிராம சபைக் கூட்டம் நடத்திய ஸ்டாலினிடம் வேலுமணி ஆதரவாளரான அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போல், கோவை மாநகராட்சி வார்டுகளில் மக்களை சந்திக்க செல்லும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடமும் எஸ்.பி.வி. ஆதரவாளர்கள் கேள்விகள் எழுப்பி பரபரப்பை உண்டாக்க காத்திருக்கிறார்கள்.
எதனால் பலவீனம்
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் தன் மீது நம்பிக்கை வைத்து கொடுத்துள்ள பொறுப்பு என்பதால், அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய இடத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரை காட்டிலும் கடந்த சில நாட்களாக கோவையிலேயே அதிகம் தங்குகிறார். கட்சி கோவையில் ஏன் பலவீனமாக இருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக அலசி ஆராய்ந்து ஸ்கேன் ரிப்போர்ட் தயார் செய்து வைத்துள்ள அவர், அதை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளார்.
சீட் எதிர்பார்ப்பு
கடந்தகால தேர்தல்களில் கோவை மாநகராட்சியை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு கொடுத்த திமுக இந்த முறை தானே போட்டியிட உள்ளது. கோவை மேயர் பதவி பெண்கள் கோட்டாவில் வருவதால் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இப்போதே தங்கள் வீட்டுப் பெண்களை அதில் நிறுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுமட்டுமல்லாமல் அதிமுக சார்பில் சோனாலி பிரதீப், திமுக சார்பில் மீனா லோகு, மீனா ஜெயக்குமார் என பலரும் மேயர் தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சம பலம்
எஸ்.பி.வேலுமணியும் சரி அமைச்சர் செந்தில்பாலாஜியும் சரி இருவருமே சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாக சமபலம் வாய்ந்தவர்கள். யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பதால் இவர்கள் இருவருக்கும் இடையேயான அரசியல் ஆட்டம் கோவை மாட்டத்தை கடந்து தமிழகம் தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.