ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்.. கோவை போலீசாரின் அதிரடி திட்டம்.. ஒவ்வொரு ஸ்கூலாக போய்.. விளக்கிய எஸ்.பி!
கோவை : பள்ளிக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில், 'ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்' எனும் திட்டம், கோவை மாவட்ட காவல்துறையினரால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம், பள்ளி மாணவர்களிடையே அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குழந்தைகள் பாலியல் தொல்லைகளைச் சந்தித்தால் யாரிடம் தெரிவிக்க வேண்டும், ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் குழந்தைகளை குறிவைக்கும் சைபர் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்
கோவை மாவட்ட ஊரக காவல்துறையினர் தங்கள் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகும் இடங்களைக் கண்டறிந்துள்ளனர். அத்தகைய இடங்களை ஹாட்ஸ்பாட்களாக வகைப்படுத்தி, 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' எனும் திட்டத்தின் கீழ் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளனர். கோவை ஊரக காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் நேற்று இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோவை ஊரக எஸ்.பி
இதுதொடர்பாக கோவை ஊரக காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை ஊரகப் பகுதிகளில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊரக காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 997 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் நியமிக்கப்பட்ட காவலர்கள் அனைத்து பள்ளி மாணவர்களையும் அணுகி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும்
மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நல அலுவலர்கள் உள்ளனர். காவல்துறை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரையும் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குழந்தை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகிப்பார்கள். எந்தெந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்து, அங்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பேட் டச்
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரண்டு பிரிவுகளாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்படும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்ற குழந்தைகள் பாதுகாப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து கற்பிக்கப்படும். யாராவது தவறான நோக்கில் தொட்டால் யாரிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
சைபர் குற்றங்கள்
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அதிகமாக ஸ்மார்ட் போன் போன்ற கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதால், சைபர் குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்க இருக்கிறோம், திங்கட்கிழமை முதல் இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என எஸ்.பி பத்ரிநாராயணன் கூறியுள்ளார்.