தனியொருவராக போராடிய ஆசிரியை சபரிமாலா.. கோவை மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்.. கைது செய்தது போலீஸ்
கோவை: கோவையில் +2 மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆசிரியை சபரி மாலா செஞ்சிலுவை சங்கம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் கைது செய்தனர்.
கோவையில் +2 மாணவி ஆசியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது லாக்டவுனை தொடர்ந்து வெளிவந்திருக்கும் மூன்றாவது நிகழ்வு என ஆசிரியை சபரி மாலா வேதனை தெரிவித்தார்.
மேலும் எத்தனை மாணவிகள் தற்கொலை, மற்றும் பைத்தியம் பிடித்திருக்கிறார்களா என தெரியவில்லை. அதற்கான பட்டியல் இல்லை என குற்றம் சாட்டினார். மாணவிகளால் தான் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டார்
உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அதற்காக தான் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக சபரிமாலா போராட்டத்தின் போது தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் வாகனத்தில் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சிறையில் அடைப்பு
முன்னதாக மாணவி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மிதுன் சக்கரவர்த்தியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மீரா ஜாக்சன்
கோவை மாநகர துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் இந்த வழக்கு குறித்து அளித்த பேட்டியில், " ஏற்கனவே மிதுன் சக்கரவர்த்தி மூலம் போடப்பட்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மீரா ஜாக்சன் குற்றவாளியாக சேர்க்கபட்டு ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளது. சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது" என்றார்.

தனிப்படை அமைப்பு
கோவை மாணவி மரண விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் மாணவர்கள் அமைப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் முதல்வரை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படை அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications