ஓயாத அட்டாக்.. ஊழல் அமைச்சருக்கும் உள்துறைக்கும் என்ன சம்பந்தம்? செந்தில்பாலாஜியை வம்பிழுக்கும் மலை!
கோவை : கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் செந்தில் பாலாஜி, ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளுக்கு நாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான வார்த்தைப் போர் முற்றி வருகிறது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அண்ணாமலை தெரிவித்து வரும் கருத்துகள், இருவருக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இருவர் இடையேயான விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதலாக மாறி வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றும் செந்தில் பாலாஜியை தாக்கியுள்ளார் அண்ணாமலை

அண்ணாமலை vs பாலாஜி
அண்ணாமலை - அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான மோதல் போக்கு நீண்டு வருகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் தொடர்பாக தவறான தகவலைப் பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்ததைக் குறிப்பிட்டு, அவரை 'சாராய அமைச்சர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி அண்ணாமலை விமர்சித்தார். தொடர்ந்து அந்த சொற்றொடரை பயன்படுத்தி வருகிறார் அண்ணாமலை.

செந்தில் பாலாஜி
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து வந்த நிலையில், கோவை சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர் இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக என்.ஐ.ஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

சாராய அமைச்சர்
அதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை, "திமுக அரசின் சாராய அமைச்சர் "அரசுக்குத் தெரியாதது அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களும் அரசு இயந்திரமும் எதை நோக்கி நகர்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் அமைச்சர் சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகுவாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அரசியல் கோமாளி
கோவையில் பாஜக பந்த் நடத்தப்போவதாக அறிவித்து பின்னர் பல்டி அடித்த நிலையில் நேற்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சியை சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை எனக் கூறுவது என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநில தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என காட்டமாகவே தெரிவித்தார்.

அமைச்சர் காதில் கோளாறு
இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'சாராய அமைச்சருக்கு காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன். "எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாமல் அறிவித்துவிட்டார்கள்" என்று நான் சொன்னதாக பொய்களை கட்டவிழ்த்து விடும் சாராய அமைச்சர் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அதற்கு தண்டனையாக குறைந்தபட்சம் 100 மதுக் கடைகளையாவது மூட வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்தார்.

அண்ணாமலை அறிக்கை
இந்நிலையில்தான் அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களுக்கு பதில் கொடுத்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை அதில் பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையிலும் செந்தில் பாலாஜியை விமர்சித்துள்ளார்.

இவருக்கு என்ன சம்பந்தம்?
அண்ணாமலை அதில், "கோவை சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்த துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?" என அட்டாக் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications