கண்ணைக் காட்டிய எடப்பாடி.. ஸ்கெட்ச் போட்ட வேலுமணி.. டிச.2ல் இருக்கு.. பலத்தைக் காட்ட ‘பலே’ திட்டம்!
கோவை : திமுக அரசை கண்டித்து கோவையில் டிசம்பர் 2ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் குழப்பங்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி அணி, திமுக அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்தி வரும் நிலையில், கோவைக்கு திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை எனக் கூறி, திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

வேலுமணி கூட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவருமான தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 - திட்டம்
இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் டிசம்பர் 2-ஆம் தேதி சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார்.

ஒண்ணுமே செய்யல
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை. நாங்கள் இருந்தபொது பணிகள் வேகமாக நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பணிகள் பொறுமையாக நடக்கிறது. கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஒன்றரை வருடமாக எதுவும் செய்யவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது கேட்டாலும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஆனால் சாலைகளில் அவராலேயே பயணிக்க முடியாத நிலைதான் காணப்படுகிறது. இனியாவது கோவை மாவட்டத்துக்கு ஏதாவது செய்யுங்கள்" என்றார்.

புறக்கணிக்க வேண்டாம்
மேலும் பேசிய அவர், "கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்க வேண்டாம். கோவையில் அதிமுக ஆட்சியில் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது, கொசு மருந்து கூட அடிப்பதில்லை, அரசு மருத்துவமனைக்கு சென்றால் சரியான சிகிச்சை இல்லை, மருந்து இல்லை, எந்த மருத்துவமனையிலாவது மருந்துகள் இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி வருகிறார்
மேலும், "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். விளம்பரத்தில் மட்டும் ஓடுகின்ற ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான். திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் கோவையில் நடக்கும். குறைபாடுகளை உணர்த்தவே இந்த போராட்டம். எடப்பாடி பழனிசாமி போராட்டதை துவக்கி வைக்க வருகிறார்." எனத் தெரிவித்தார்.

ஈபிஎஸ் திட்டம்
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் உட்பட பல விவகாரங்களில் அதிமுகவினர் அமைதி காத்து வந்ததும், பாஜகவினர் புகுந்து விளையாடியதும் அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பல விவகாரங்களையும் கையில் எடுத்து 7 முன்னாள் அமைச்சர்களோடு சென்று ஆளுநரைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அதோடு மாவட்டந்தோறும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தவும் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

பலம் காட்டும் வேலுமணி
அதன்படியே, முதல் ஆளாக களமிறங்கியிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர். கோவையில் தனது செல்வாக்கை திமுகவுக்கும், பாஜகவுக்கும் தெரியப்படுத்தும் வகையில் வேலுமணியின் இந்த போராட்டம் இருக்கும் என்கிறார்கள். கோவையில் செந்தில் பாலாஜியின் வருகைக்குப் பிறகு அதிமுக ஆட்டம்கண்டிருப்பதாக விமர்சிக்கப்படும் நிலையில், அதற்கு பதில் சொல்வதாக இந்தப் போராட்டம் இருக்கும் என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications