"சீக்ரெட் மெசேஞ்.." கஞ்சா கும்பல் தப்பிக்க உதவிய எஸ்ஐ.. தட்டி தூக்கிய போலீஸ்! கோவையில் அதிரடி கைது
கோவை: வேலியே பயிரை மேயும் கதையைப் போலக் கஞ்சா கும்பலுக்கு உடந்தையாக இருந்த கோவையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா விற்பனையும், அதுசார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் அதைத் தடுக்க வேண்டிய போலீஸாரே அதற்கு உடந்தையாக இருந்த சம்பவம் நடந்துள்ளது.
கஞ்சா விற்பனை கும்பலுக்கு உதவி செய்து, கையும் களவுமாகச் சிக்கியுள்ள எஸ்.ஐ.யிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா வேட்டை
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதனால் கொலை, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதாகச் சாடுகின்றனர். இதனிடையே, கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குமாறு சமீபத்தில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வோரை போலீஸார் வேட்டையாடி வருகின்றனர்.

கோவையில் ரகசிய விசாரணை
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இருந்தபோதிலும், கஞ்சா விற்பனை கும்பல்களை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வந்தன. கஞ்சா விற்பனை குறித்து தகவல் கிடைத்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீஸார் செல்வதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி வந்தனர். இதையடுத்து, இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

வெளிவந்த உண்மை
இந்த சூழலில், கோவை, ரத்தினபுரி சங்கனூர் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், கோவை காரமடை பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு (33) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

சைபர் க்ரைம் எஸ்ஐ
அப்போது, கஞ்சா விற்பனையில் ஜலீல், ரியாஸ்கான், மகேந்திரன் உட்பட 10 பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்திரபாபு தெரிவித்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மகேந்திரன் (35) ஈரோடு சைபர் கிரைம் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications