சக்தியை மீறி.. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உரை!
சென்னை : மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் எனவும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான முதல்வர் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு அடுத்த நாள் பல்வேறு பிரபலங்கள், முன்னாள் சபை உறுப்பினர்களுக்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அந்த உரையின் போது பல அறிவிப்புகள், பதில்களும் இருந்தது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!: தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை..!!
ஆளுநர் உரைக்கு பதிலடி.. கருணாநிதியின் மகன் என்பதை மெய்ப்பித்துள்ளேன்.. சட்டசபையில் ஸ்டாலின் ஆவேச உரை
முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் வீரத்துடனும், விவேகத்துடனும் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் கொள்கைகளை உருவாக்கி அதன் அடிப்படையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது. தொழில், வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
ஆதவன் மறைவதில்லை
தமிழ்நாடு அரசின் பன்முக கூறுகளை விளக்கியும் தமிழ்நாடு அரசு எந்த வகையில் செய்யப்படுகிறது என பாராட்டி ஆளுநர் பேசினார். கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையின் போது நிகழ்ந்தவற்றை குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. சட்டப்பேரவைக்கு வந்து உரையாற்றிய ஆளுநருக்கு நன்றி. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. செந்தமிழே நீ பகை வென்று முடிசூடிவா. மயிலாட வான்கோழி தடை செய்வதோ; மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ; முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ; அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ, உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
உழைத்து வருகிறேன்
நாள்தோறும் உழைத்து வருகிறேன் என்கிறார்கள்; நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப செயல்பட்டு கொண்டிருக்கிறோம். யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஓடி கொண்டிருக்கவில்லை; அது என் இயல்பு. 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம். கலைஞரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உழைக்கத் தூண்டுகிறது. இரவு தூக்கம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. ஒரு கோடிக்கு மேல் தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளேன்.
சக்தியை மீறி ..
மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன். நூற்றாண்டைக் கடந்த இச்சட்டமன்றத்தின் விழுமியங்களை காக்க என் சக்தியை மீறி செயல்படுவேன். இதுவரை 3346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 86 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல. தமிழ்நாடு மக்களின் நலன் என்று வந்துவிட்டால் சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்
தமிழ்நாடு அமைதிப்பூங்கா
காவல்துறை தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மதக் கலவரங்களோ, சாதி கலவரங்களோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடோ நடைபெறவில்லை. அரசின் சீரிய நடவடிக்கையால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மதவாத, இனவாத, தீவிரவாத அமைப்புகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என முதல்வர் பேசினார்.