லோக்சபா தேர்தலில் கூட்டணி?தமிழக தலைமை அறிவிக்கும்… நிர்மலா சீதா ராமன் பேட்டி
கோவை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து தமிழக கட்சி தலைமை அறிவிக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்ஒரு பகுதியாக பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை ஈச்சனாரியில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மோடி நடவடிக்கை
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி. அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் என்று அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
திராவிட கட்சிகள்
இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசில், அமைச்சரவையில் இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்கு என்ன செய்தது? அப்போது எதையும் செய்யாமல் இப்போது வேண்டுமென்றே கேள்வி எழுப்புகிறார்கள்.
கருப்புக்கொடி எதிர்ப்பு
பிரதமர் தமிழகத்துக்கு வரும் போது கருப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான அரசியல். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகையிலும் திமுக இடையூறாக உள்ளது.
மோடி தைரியமானவர்
மோடி சுயநலம் இல்லாத பிரதமர். அதனால் தான் அவர் தைரியமாக செயல்படுகிறார். ஒரே ஒரு எம்.பி.யை தான் தமிழக மக்கள் கொடுத்தார்கள் என்று பிரதமர் மோடி தமிழகத்தை ஒதுக்கி விடவில்லை.
40லும் வெற்றி
ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும்.
பாஜகவின் தேர்தல் பணி
தானும் நல்லது செய்யாமல் மற்றவர்களையும் செய்ய விடாமல் தடுக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். கூட்டணி குறித்து யோசிக்காமல் பாஜகவினர் தேர்தல் பணிகளை தொடங்குங்கள். இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது என்று பேசினார்.
பட்ஜெட் ஏற்பு
கோவையில் செய்தியாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடைக்கால நிதிநிலை அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஜிஎஸ்டி மூலம் மாநிலத்துக்கு நஷ்டம் என்றால் அந்த நஷ்டத்தை சரிகட்டுவது மத்திய அரசுதான்.
தமிழக தலைமை
விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து தமிழக கட்சி தலைமை அறிவிக்கும். தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ரபேல் பற்றி பொய்யான தகவல்களை பிரசாரம் செய்து வருகின்றன என்று கூறினார்.