பாழடைந்து கிடக்கும் வீடுகள்.. புகார் தெரிவித்த மக்கள்.. உடனே சென்று ஆய்வு நடத்திய அமைச்சர்!
கோவை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்களில் சிமெண்ட் பூச்சு உதிர்வதும், மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோசமான நிலையில் இருக்கும் இந்த குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஐ.டி குழுவினர் அங்கு சோதனை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்பித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மோசமான நிலையில் இருக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வு செய்யும்படி அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகே பாழடைந்து கிடக்கும் வீட்டு வசதிவாரிய வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி இன்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு செய்தார்
தொடர்ந்து அவர் அங்குள்ள பாழடைந்து கிடக்கும் வீடுகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த பகுதிகளில் ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு பொதுவழி தனியாரிடம் இருந்தது. அந்த இடத்தை அவர்கள் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்கள் அதை வாங்கியவர்கள் இந்த இடத்தை அடைத்து விட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு வழி வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி வழி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிங்காநல்லூரில் 960 வீடுகளை கட்டித் தர தயாராக உள்ளோம். இங்கு உள்ள 4 சங்கங்களும் ஒன்றிணைந்து வந்தால் கட்டித் தர தயாராக உள்ளோம். ஏற்கனவே இந்த சிங்காநல்லூர் குடியிருப்பில் அலார்ட் பெற்றவர்கள் சிலர் பணம் கட்டாமல் இருந்துவிட்டனர். எனவே பணம் செலுத்தாதவர்கள் குறைந்த வட்டியுடன் கூடிய தொகையை செலுத்தினால் தற்போது புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அலார்ட் ஒதுக்கப்படும்.

தகவல் தெரிவிக்கலாம்
கோவையில் எங்கெல்லாம் கட்டிடங்கள் மோசமாக உள்ளதோ அங்கெல்லாம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.11 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகும். அதில் பயனாளிகளை கட்டச் சொல்வது ரூ.1 லட்சம் முதல் ரூ.1¼ லட்சம் வரை மட்டுமே. மீதமுள்ள தொகையை அரசே செலுத்தும். விற்பனை செய்யாமல் உள்ள வணிக வளாகம் உள்பட பல்வேறு இடங்கள் விற்பனை செய்வதில் முறைகேடு நடந்து வருவதாக புகார் வந்தது. ஆனால் அதில் அவ்வாறு முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. அதுபோன்று புகார்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications