ரியல் அதிமுககாரர்.. ஊராட்சி துணைத்தலைவர் டூ கவுன்சிலர் டூ எம்எல்ஏ.. யார் இந்த அமுல் கந்தசாமி?
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள், அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சூழலில் அடுத்த சில மணி நேரங்களிலேயே அமுல் கந்தசாமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மோசமான உடல்நிலை காரணமாக உயிரிழந்தார். புற்றுநோய் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமி, திடீரென உயிரிழந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று காலை கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அமுல் கந்தசாமி காலமாகி இருக்கிறார். 2021ஆம் ஆண்டு வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. இவர் கோவை மாவட்டம் அன்னனூரைச் சேர்ந்தவர்.
சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டாலும், சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் ஆறுமுகத்தை வீழ்த்தி வெற்றிபெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக முதல் வெற்றியை பெற்ற எம்எல்ஏ அமுல் கந்தசாமி தான். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல் சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்த அவர், ஒருமுறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட கவுன்சிலராகவும் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபநிதி என்ற மகளும் இருக்கின்றனர்.
இவரது மகள் கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் நாளை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications