உதயநிதிக்கு புது அசைன்மென்ட்.. "அந்த" 2 பேரை சமாளிக்க ஸ்டாலின் திட்டமாமே.. கோவையில் என்ன நடந்தது?
கோயம்புத்தூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கோவையில் அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் ஆளும் திமுக பல்வேறு திட்டங்களை வகுத்து இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கோயம்புத்தூரில் கொரோனா கேஸ்கள் உயர்ந்ததும் அடிக்கடி கோயம்புத்தூருக்கு விசிட் அடித்தார். அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலினும் அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களில் முதல் பெரிய நிகழ்ச்சியாக கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
கொடிசியா மைதானத்தல் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வில் உதயநிதி கலந்து கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின் அவர் கலந்து கொண்ட பெரிய நிகழ்ச்சி இதுவாகும்.
பூசி மொழுகும் முதல்வர் ஸ்டாலின்! தூங்குபவர்களை எழுப்பலாம்.. நடிப்பவர்களை! அனல் காட்டிய அதிமுக இபிஎஸ்
என்ன நடந்தது?
இந்த நிகழ்விற்கு முன்பாக நேற்று கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் பல்வேறு விளையாட்டு வீரர்களை அங்கு சந்தித்து பேசினார். அதேபோல் அங்கு உள்ள விளையாட்டு விடுதிகளை பார்வையிட்டார். அதன்பின் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் மூலம் கோவையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை முதல்வரிடம் இருந்தது. இந்த துறைதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் கைக்கு இந்த துறை சென்றுள்ளது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர்.. எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும். அதன்படி சிறப்பு திட்டங்கள் துறை மூலம் கோவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்னென்ன,.. அதன் தற்போதைய நிலை என்ன என்று உதயநிதி ஸ்டாலின் நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
கோவை குறி
கோவையில் திமுக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. அங்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பணிகள் காரணமாக திமுக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட இங்கு திமுக சிறப்பாக செயலாற்ற இதுவே காரணமாக இருந்தது. ஆனால் அதே சமயம் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜக அண்ணாமலை இருவரும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு பேருமே கொங்கு வேளாள கவுண்டர்கள் ஜாதியை வைத்து தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்ட தீவிரமாக முயன்று வருகின்றனர். முக்கியமாக அண்ணாமலைக்கு இளம் தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது.
சமாளிப்பு
இந்த நிலையில்தான் இவர்கள் 2 பேரையும் சமாளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலினையும் கொங்கில் களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு முழுக்க பாஜக, அதிமுக வெல்ல கூடாது என்பதால் இங்கே செந்தில் பாலாஜிக்கு உறுதுணையாக உதயநிதியையும் களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரான பின் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு சில நாட்கள் ஷிப்ட் ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கனவே ஒன்இந்தியா தமிழ் செய்தியில் நாம் குறிப்பிட்டு இருந்தோம். அதன்படியே தற்போது கோவைக்கு உதயநிதி பயணம் மேற்கொண்டு உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக வென்றுவிட்டது. கொங்கு மண்டலத்தையே திமுக பிடித்துவிட்டது. இந்த வெற்றியை அங்கு தக்க வைக்கும் விதமாக உதயநிதியை சில காலம் கோவைக்கு தலைமை ஷிப்ட் செய்ய சொல்ல போவதாக தகவல்கள் வருகின்றன.
நிரந்தரம்
அதாவது நிரந்தரமாக இல்லாமல் அங்கேயே அடிக்கடி தங்கும் விதமாக உதயநிதிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படலாம் என்கிறார்கள். அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்து திமுக இந்த மூவை கையில் எடுக்க போவதாக தெரிகிறது. மேலும் எஸ்பி வேலுமணி மீது இனிதான் சில வழக்குகளில் ஆக்சன் எடுக்கப்படும். அப்போது அங்கு அதிமுக மொத்தமாக சரியும். அதை பயன்படுத்தி உதயநிதியை அங்கு களமிறக்கும் முடிவில் திமுக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சில மேடைகளில் கோவைக்கு ஷிப்ட் ஆகும் தனது ஆசையை.. கொஞ்ச நாள் வந்து இங்கே தங்குவேன் என்று தெரிவித்து இருந்தார்.
அதிமுக
அந்த ஆசை இந்த முறை கண்டிப்பாக நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது... தேர்தல் முடிந்துவிட்டது.. இனிதான் நிறைய காட்சிகள் மாற போகின்றன.. எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வர போகின்றன என்று கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி மோதலால் கோவையில் பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதிமுக மோதலை பயன்படுத்தி கொங்கை பிடிக்க பாஜக திட்டமிட்டு உள்ளது. அங்கு பாஜக வளர்ந்துவிட்ட கூடாது என்பதால் உதயநிதியை களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 தேர்தலுக்காக இந்த ஏற்பாடுகளை திமுக செய்து வருகிறது என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.