உண்ணாவிரதத்தை தொடங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்... அரசிடம் அவர் வைக்கும் கோரிக்கை என்ன தெரியுமா?
கொழும்பு: பொருளாதார சீரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மக்களுக்கு அரசு உதவ வலியுறித்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிகா பிரசாத் நாளை 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மோசமடைந்த இலங்கையின் நிலை
இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

தீவிரமடைந்த போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

அரசுக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை முன்னாள் கேப்டன் அஜந்தா மேத்தியூஸ், சங்ககரா உள்ளிட்டோரும் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதம்
இந்த நிலையில் இலங்கையின் கல்லே பகுதியில் மக்கள் நடத்தி வரும் பெருந்திரள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிகா பிரசாத், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். "நாளை கல்லே போராட்டக் களத்தில் நான் 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன். ஈஸ்டர் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதுடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உதவி செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்குகிறேன்." என அவர் அறிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications